வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 7
ஜனவரி-மார்ச் 2009
முகப்பு  |  உள்ளடக்கம்

கட்டுரை

நாட்டுக் கோட்டைச் செட்டியாரும் மலாக்கா செட்டி சமூகமும்
ஏ.தேவராஜன்

 

       
 

மலாக்கா மாநிலத்தில் வாழ்ந்துகொண்டே என்னைப் பற்றியும் என் வாழ்வைப் பற்றியுமே சிந்தித்த சராசரியிலும் கீழான மனிதன் நான். என்கூடவே முப்பாட்டன் காலந்தொட்டு வாழ்வை நகர்த்தி வந்த தமிழர் மரபில் வந்த ஒரு சமூகத்தைப் பற்றி கடுகளவாவது தெரிந்து வைத்திருந்தேனா? என்ன வகை மனிதன் நான்! அதனால், மோட்டார் சைக்கிளை முடுக்கி நாற்பது நிமிடங்களில் மலாக்கா பட்டினத்தை அடைந்தேன். அந்தச் சமூகம் வசிக்கின்ற பகுதி ஏற்கெனவே தெரிந்திருந்தாலும், அது குறித்த முன்னறிவோடு செல்லலாம் என்று தீர்மானித்திருந்து,அதற்காக வணிகப் பெருமகனார் டத்தோ S.K.R.M துரைராஜ் அவர்களை முதலில் சந்திக்கலாம் என்று எண்ணியிருந்தேன். இதற்குச் சிறப்புக் காரணமும் உண்டு. பொதுவாகவே டத்தோ S.K.R.M. துரைராஜ் அவர்கள் நிறைகுட மாயினும், எல்லாப் பொது இலக்கிய நிகழ்வுகளிலும் தன்னடக்கமாய்ப் பின்னிருக்கையில் அமர்ந்திருப்பதையே விரும்பும் பண்பினர். அதனால், அவரில் ஓர் ஈடுபாடு இருந்தது. அவர் அச்சமயம் வேறொரு காரியம் பொருட்டு வெளியில் சென்று திரும்பும் வரை, அவர் மகன்தான் சிறு விளக்கம் கொடுத்தார். பிற்பாடு அவர் வந்து சேர்ந்ததும், பல பயனான விவரங்கள் எனக்குக் கிடைத்தன. வேறு யாராவது இது பற்றிப் பேசுவார்களா என வினவினேன். லோரோங் ஹங் ஜெபாட்டுக்குச் சென்றால் அங்கு வழக்கறிஞர் அருணைச் சந்திக்கலாம் என்றார். இந்த நகைக்கடையிலிருந்து பொடிநடையொக நடந்து சென்றால் ஐந்தே நிமிடங்களில் அடைந்துவிடலாம் என்றார். அவரது பேச்சைக் கேட்டபின்பு மோட்டார் சைக்கிளை நன்கு பூட்டிவிட்டு நடந்தேன்.( ஏற்கெனவே PCY 1074 காணாமல் போயிருந்த பட்டறிவு)

அது லோரோக் ஹங் ஜெபாட் என்பதாகப் பெயர். 64 ஆம் எண் கொண்ட கடைவீதியில்தான் வழக்கறிஞர் அருணின் அலுவலகம் உள்ளது. அதனை அடைவதற்கு முன் மலாக்கா நதியைப் பாலத்தின் மூலம் கடந்து செட்டியார் இருப்பிடங்களைத் தாண்டிச் சென்றாக வேண்டும். அது நாம் வழக்கமாக வசிக்கின்ற வீட்டின் அமைப்பைப் போல் தெரியாது என்பதைத் திறந்து கிடந்த ஒரு கடை வீட்டைப் பார்த்ததும் அறிந்து கொண்டேன். வாசலில் நின்று தெரு நாய் ஒன்று எட்டிப்பார்ப்பது போல தலையை உள்ளிட்டு " வணக்கம் ஐயா'' என்றேன். கல்லாப் பெட்டியைப் போல அமைந்த நீண்ட வாங்கிற்கு அருகில் வெள்ளையும் சள்ளையுமாய் வேட்டி சட்டையுடன் அறுபது வயதைத் தாண்டிய முதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். வேறு யாரையுமே காணேன். வணக்கம் என்பது மரியாதைக் குறைவான வார்த்தையா என்று யோசிப்பதற்குள் " யாருமில்ல... வெளிய போ!" என்று சூடான வார்த்தைப் பிரயோகம் என் ஆர்வத்தைத் தடுமாறச் செய்தது. " நான் திருடன் இல்லை ஐயா!" என்றேன். அவர் திரும்பத் திரும்ப மனனம் செய்ததைப் போல ஒப்புவித்தார். உள்ளே அனுமதிக்காவிட்டால் என்ன, பேசக்கூடவா முடியாது? எனக்குள் கோபம் பிரவாகமெடுத்தது. நான் சராசரி மனிதன் என்று ஏற்கெனவே சொல்லிவிட்டேன் அல்லவா?" கதவை நல்லா பூட்டிக்குங்க. நான் ரொம்ப மோசமானவன்!" என்று சொல்லிவிட்டு அதே வரிசையில் இன்னொரு கடைக்குத் தாவ அங்கு வெகு நேரமாய் என்னையே பார்த்துக் கொண்டிருந்த அறுபது வயதைத் தாண்டிய அம்மா சிரித்தபடி அமர்ந்திருந்ததார். " என்ன தம்பி செய்றது? எங்கே பார்த்தாலும் திருடு அது இதுன்னு நடக்குது. இன்னிக்கு நேத்திக்கு இல்ல...!ஒங்களப் பாத்தாலும் அப்படித்தான் இருக்கு! அதனாலதான் பயம்" என்றார். நானும் அப்படித்தான் வழிப்போக்கன் மாதிரி தெரிந்தேன். அப்பாடா! இவராவது பேசினாரே என்று ஆசுவாசப்பட்டேன். இவரது பெயர் வைரத்ததாயம்மாள் @ வள்ளிக்கண்ணு-வயது 68. இந்தத் தெரு 100 ஆண்டுகளுக்கு முன்பு செட்டித் தெரு என்ற பெயர்தான் இருந்ததாம். டச்சுக்காரர் ஆண்ட காலத்தில் ( 1641-1824 ) மூங்கில் காடுகளாக இருந்த இப்பகுதியை அழித்துப் பலகையாலும் அத்தாப்பு ஓலைகளாலும் தமிழர்கள்தான் வீடுகளைக் கட்டினார்களாம். இத்தெருவைச் சுற்றியுள்ள கிராமத்துக்குக் கம்போங் கிலீங் @ மலாக்கா செட்டி கிராமம் என்ற பெயர், அப்பொழுது வழக்கில் இருந்ததை இன்னமும் வாழ்ந்து வருகிற வயதானவர்களுக்கு மட் டுமே தெரியும் என்றார். அந்த அம்மா சிறிய அளவிலான குளிர்பானக் கடையைப் பராமரித்து வருகிறார். ஐந்து நிமிடங்கள் பேசினாலும் அன்போடு பேசியதால் இரண்டு வெள்ளி கொடுத்துச் சில்லென்று குடித்துவிட்டு வழக்கறிஞர் அருணின் அலுவலகத்திற்குச் சென்றேன். பக்கம்தான். அசப்பில் பார்த்தால் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் போல தோற்றமளித்தார். காரைக்குடியி லிருந்து வந்து குடியேறி இருபது ஆண்டுகள் ஆகிவிட்ட தாகவும் தற்போது தந்தையின் நிர்வாகத்தைக் கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டார். அமர்ந்து பேசுவதற்குச் செந்தணப்பு வசதி கொண்ட அறையை எனக்காக ஒதுக் கித் தந்த பொழுது அங்குப் பேழைப் பேழையாக நிரம்பிக் கிடந்த நீதிசார் புத்தகங்களைக் கண்டு துணுக்குற்றேன். சின்ன பையன் போலிராமல் மரியாதையாகப் பேசி முறையாகத் தகவல்களைத் திரட்டலாம் என்று முற்பட்ட போது முற்பகல் பன்னிரண்டை நெருங்கிக் கொண்டி ருந்தது. நான் மலாக்கா செட்டி சமூகத்தைக் குறித்துத் தெரிந்து கொள்ளத்தான் வந்தேன் என்றாலும் நாட்டுக்கோட்டை செட்டியாரைப் பற்றியும் தெரிந்து கொள்வதும் நலம் என்றேன். மலாக்கா செட்டியைப் பற்றி தனக்கு முழுமையாகத் தெரியாதெனவும் நாட்டுக் கோட்டைச் செட்டியாரைப் பற்றி வேண்டுமானால் சொல்கிறேன் என்றார். இரண்டு வகை ' செட்டிகளைத்' தெரிந்துவைத்திருத்தல் நன்மையென்று கருதி காது களைக் கூர்மையாக்கிக் கொண்டேன். அப்போது அவர் கூறிய விவரங்கள் பின்வருமாறு:

ஃ நாட்டுக்கோட்டைச் செட்டியாரும் (நகரத்தார் ) மலாக்கா செட்டி சமூகமும் ஒன்றல்ல.
ஃ நாட்டுக்கோட்டைச் செட்டியாரின் தாய்மொழி/ பேச்சு மொழி தமிழே.
ஃ நாட்டுக்கோட்டைச் செட்டியார் இங்குக் குடியேறி தோராயமாக 100-150 ஆண்டுகள் இருக்கும்.
ஃ இவர்கள் பூம்புகா'ர் வணிகர் மரபைச் சேர்ந்தவரென்றும், பூம்புகார் பெரும்பாலும் கடற்கோளுக்கு இரையாகி வந்தமையால் அவர்கள் இடம் பெயர்ந்து இராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, செட்டி நாடு போன்ற பகுதிகளில் வாழ்ந்து வந்த சமூகமாகும்.
ஃ சந்யாசி ஆண்டவர் ஜீவசமாதி அடைந்த மலாக்கா சந்யாசி மலை கோயில் நாட்டுக்கோட்டையாரு டையது. இது போல பல கோயில்கள் முழுக்க முழுக்கச் சுய முதலீட்டைக் கொண்டு நிறுவப்பட்டவை.
ஃ ஐதீ க வழிபாட்டில் முழு நம்பிக்கையு டையவர்கள்.
ஃ நாட்டுக்கோட்டையர் என்பது வணிகத் தொடர்பு சார்ந்த தமிழ் மக்களின் ஒரு வகைப் பிரிவு (குலம்).
ஃ முன்னொரு காலத்தில் மலாக்கா பட்டினத்தில் மட்டும் 100 க்கும் குறையாத வணிகக் கடைகளை வைத்திருந்தவர்கள்; பெருஞ்செல்வந்தர்கள்.
ஃ மலாக்காவைத் தவிர்த்துத் தென்கிழக்காசிய நாடுகளிலும் மலாயாவின் பல மாநிலங்களிலும் அழுத்தமாகக் கால் பதித்தவர்கள்.
ஃ யாரிடமும் கையேந்தாத சுய உழைப்பை மட்டும் நம்பியவர்கள்.
ஃ மலாக்கா மாநிலத்தில் மட்டும் 40,000 ஏக்கர் நிலபரப்பைப் பெற்றிருந்தவர்கள்.
ஃ ஏராளமான தோட்டங்களுக்கு உரிமையாளர்கள்.
ஃ பர்மா, கம்போடியா, ( மலாயா உட்பட- மே 1969 இனக் கலவரம்) போன்ற தேசங்களில் குடியுரிமைப் பிரச்சனையை எதிர்நோக்கி சொத்து களைச் சீனரிடமும் அந்தந்தத் தேசத்தின் செல்வரிடமும் விற்றுவிட்டுத் திரும்பவும் தமிழகத்திற்குத் திரும்பியவர்.
ஃ கம்யூனிஸ்ட் மற்றும் சீனர்களின் அச்சுறுத்தல் / மிரட்டலால் உயிருக்குப் பாது காப்பின்றிப் பரித வித்தவர்கள்.
ஃ விசா பெறுவதில் சிக்கலை எதிர்நோக் கியவர்கள்.
ஃ 1920 களில் தொடங்கி பதினைந்து வருடங்களாக அச்சகத்தின் மூலம் 'தமிழ்க் கொடி' என்ற வாரப் பத்திரிகையை ஒ.எ.ஆர். அருணாச்சலம் செட்டியார் என்பாரைக் கொண்டு தமிழ்ப்பணி செய்தவர்கள்.( தமிழ் நேசன் பத்திரிகையும் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் ஆரம்பித்ததே)
ஃ நேதாஜியின் தீவிர ஆதரவாளர்கள்.
ஃ 15 ஆண்டுகளுக்கு முன் கம்பன் விழாவை மலாக்காவில் பிரமாண்டமாய் நடத்தி அடிப்பொடி சா.கணேசன், தமிழ்க் கடல் இராய. சொக்கலிங்கம், மு.பா. இரத்தினச் செட்டியார் போன்ற தமிழக அறிஞர் பெருமக்களின் இலக்கியப் பேருரையை நிகழ்த்தி தமிழ்ப் பணியைச் செய்தவர்கள்.
ஃ இந்தத் தெருவுக்கு 'நாட்டுக்கோட்டையர் தெரு' என்ற பெயரைக் கொண்டு வந்ததோடு பல நகரங் களில் அவர்கள் கட்டிய கட்டிடங்கள் பழைமை இன்றளவும் உள்ளன . (இப்பெயர் தற்போது வழக்கில் இல்லை)
ஃ தற்போது புதிய தலைமுறையின் மனமாற்ற மும், நவீன கல்வியின் வாயிலாகக் குலத்தொழில் மாற்றத்தையும் எதிர்நோக்கி பழைய மிடுக்கைப் பையப் பைய இழந்து வருபவர்கள்.
ஃ இன்று வங்கிக்கடன் பெறுவதில் பிற சமூகத்தைவிட சவாலை எதிர்நோக்குகிறவர்கள்.

வழக்கறிஞர் அருண், மலாக்கா செட்டி சமூகத் தைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒருவரை முன் மொழிந்தார். அவர்தான் டத்தோ S.K.அருணாலம் பிள்ளை. அவரை அணுகினால் மலாக்கா செட்டி சமூகத்தவர் பற்றி நிறைய தகவல்கள் தருவார் என்று சகோதர உணர்வுடன் கூறி வழி காட்டினார். தொடக்கத்தில் கண்ட கல்லாப்பெட்டிக்காரருக்கும் இவருக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள். முன்னவர் பயந்துவாழ்ந்த சமூகத்தின் எச்சம்! அதற்குக் காரணம் நிச்சயம் அவரல்ல.

மற்றொரு குறுக்குத் தெரு வான ஜாலான் துக்காங் பெசியில் டத்தோ S.K.அருணாலம் என்பவர் செலவுக் கடை வைத்திருப்பதை அறிந்தேன். அந்தக் கடையை ஒட்டி யபடி மலாக்கா செட்டி சமூகத்தவர் 1781- இல் எழுப்பிய சிறீ பொய்யாத விநாயகமூர்த்தி கோவில் தென் பட்டது. தென்கிழக்காசியாவின் பழைமையான இந்துக் கோவில் இதுவாகும். பிற்காலத்தில் அக் கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பை நாட்டுக் கோட்டைச் செட்டியாரிடம் வழங்கப்பட்டுவிட்டதாக அறிந்தேன். ஆயினும், அக்கோயிலில் இன்னமும் மலாக்கா செட்டி சமூகத்தவரின் பெயர்களே கோயிலின் முகப்பில் பொறிக்கப்பட்டுள்ளன.

டத்தோ S.K.அருணாலம் என்பவர் நெற்றியில் குங்குமத்தோடு தமிழரைப் போலவே காணப்பட்டார். தொடக்கத்தில் தமிழிலேயே உரையாடினேன். மொழி புரியாத காரணத்தால் 'apa' (என்ன?) என்று என்னிடமே மலாயிலும் ஆங்கிலத்திலும் உரையாடத் தொடங்கினார். பின்பு, நான் வந்த நோக்கத்தை ஆங்கிலத்தில் சொன்னபோது கடுகடுப்புடனும் வேண்டா வெறுப்புடனுமே சந்திப்புக்குச் சம்மதித்தார். (Kamu mencari duit dengan membuat liputan tentang masyarakat kami, ya?) எங்களைப் பற்றிய தகவலைத் திரட்டி பணம் தேடுகிறீர்களா? என்று சொன்னபோது பதிலுக்கு நானும், "இது என் தொழிலல்ல, பல்கலைக்கழகத்தின் ஆய்வேட்டுக்காகவும் சுயநலத்துக்காகவும் உங்கள் காலடியில் வந்து விழுபவனல்லன், இதற்காக மழையை யும் பொருட்படுத்தாது வீதியில் அலைய வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது. ஒரு புனிதமான பதிவு நிமித்தம் வந்துள்ளேன்" என்று தீர்க்கமாகச் சொன்னேன். எனது இருத்தலை நிலைப்படுத்த அவரது கடை வாயிலிலேயே நின்று பேசலாம் என்றேன். இப்படித்தான் பலர் வந்து போனதாகவும் மற்ற இனத்தவரைத் தவிர்த்துத் தமிழ் மாணவர்கள் எவரும் ஆய்வுகளைக் கொண்டு வந்து மருந்துக்கும் காண்பிக்கவில்லை என்றார். "என்னைத் தாராளமாக நம்பலாம். அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவனல்லன் என்றேன்". பிப்ரவரி 2009இல் 'வல்லினத்தோடு' திரும்பவும் சந்திக்கிறேன் என்று சொன்னபோது அவரது முகத்தில் புன்னகை ரேகை படர்ந்தது.

தமிழ் விளங்குமா என்பதைத் தெரிந்துகொள்ள பிரத்தியேகமான கேள்வியைத் தொடுக்காமல், என் பேச்சிலேயே மும்மொழியையும் கலந்துதான் பேசினேன். தமிழில் அவருக்கு ஆர்வம் இருந்ததை அவ்வப் பொழுது அவர் உதிர்த்த சொற்களில் செவிமடுக்க முடிந்தது. தமிழ் உச்சரிப்பு என்னவோ பிற இனத்தவர் பேசுவது போல் மழலைத்தனம் மிகுந்திருந்தது. ஆனாலும், ஆகம ஐதீக பதங்களைத் தமிழரைவிடச் சரியாகவே உச்சரித்தார்!

செட்டி என்ற சொல்லை எழுதுவதில் மிகத் தெளிவாகவே இருந்தார். எங்கள் சமூகத்தைப் பலர் ' CETI ' என்றே தவறாக எழுதி வரு கின்றனர்; அதன் பொருள் வேறு என்று கூறிவிட்டு ஒரு வெற்றுத் தாளில் 'CHETTI' என்று பெரிதாய் எழுதி இப்படித்தான் எழுத வேண்டும் என என்னிடம் காண்பித்தார். முதலில் கூறப்பட்ட சொல் முழுக்க முழுக்க தமிழ்ச் சமுதாயப் பிரிவினரையும் வட்டித் தொழில் புரிபவரையும், பின்னது கலிங்கப்பட்டணத்தின் தொன்ம உறவையும், 14 ம் நூற்றாண்டில் மலாக்கா துறைமுகக் காலத்திலிருந்து உருவான புதுவணிகை சமுதாயம் எனவும், கடல் வழி வாணிபம் செய்த தந்தைக் குல பாரம்பரியம் என்பதையும் வலியுறுத்தினார். செட்டி, பிள்ளை, நாயக்கர், இராஜா, படையாச்சி, முதலியார், பத்தர், பண்டாரம் கலியன் என்ற பிரிவினர் இவர் களிடத்தில் வேரூன்றியிருப்பினும் ஒற்றுமையாகவே உள்ளனர்!

15 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு, மலாக்காவும் அதன் சுற்று வட்டார பிராந்தியங்களும் இந்து சமயக் கோட்பாட்டில் வேரூன்றியும், ஆட்சி செய்த மன்னர் களை 'Raja' என்றும் 'Sri' என்றும் அழைத்து வந்த தாகவும் மேலும் விளக்கினார். எங்களது உரையாடல் சூடு பிடிக்கத் தொடங்கியபோது குறுக்கிட்ட தமிழக அன்பர் ஒருவர் தமிழேலேயே பேசி பொருளை வாங்கிச் சென்றதைக் கவனித்தேன். இவரும் நறுக் நறுக்கென்று இரத்தினச் சுருக்கமாகத் தமிழில்தான் பதிலளித்தார்; அது வாக்கியமாக இல்லாவிட்டாலும் அந்த மிடுக்கை ஒற்றைக் கண்ணால் இரசித்தேன்; சிரித்தார்.

மலாக்கா செட்டி சமூகத்தைப் பற்றி இன்னொரு கருத் தும் நிலவுகிறது. அதாவது, அந்தமான் தீவிலும் இன்ன பிற தீவிலும் வெள்ளையர்களால் நாடு கடத்தப்பட்டுக் கைதிகளாக நடத்தப்பட்ட தமிழர்கள் தான் (கட்டபொம்மன் உடன்பிறப்புகள் உட்பட) பின்னாளில் மலாக்காவில் குடியேறி வெள்ளையர்களுக்கு அடிமையாய்க் கூலி வேலை செய்து, அதன்பின் காலவ ரையறை முடிந்தபின் உள்நாட்டுப் பெண்களை மண முடித்துச் செட்டிச் சமூகமானார்கள் என்று கூறப் படுவதும் உண்டு. இதைத் தவிர்த்து முன்பு தமிழக காஞ்சி புரத்தில் ஏற்பட்ட கலவரத்தால் தப்பியோடி வந்தவர் கள்தான் இந்தச் செட்டிகள் என்றும் கூறப்படுவதுமுண்டு. இவ்விரு கருத்து களையும் முதற்கருத்தோடு ஒப்பு நோக்கும்போது முரண்படுவதைக் காணலாம். போர்த்துக்கீசியர், தாங்கள் மலாக்காவைக் கைப்பற்றித் தங்கள் வசமாக்கிக் கொண்டபோது (1511-1641) அவர்கள் வரைந்த மலாக்கா வரைபடத்தில், மலாக்கா கடற்கரையோரம் அமைந்த 'கம்போங் கிலீங்' என்ற கிராமத்தையும் குறிப்பிட்டு வரைந்து காட்டியுள்ளனர். அதோடு,அங்கு வாழ்ந்த செட்டி சமூகத்துக்குத் தங்களுக்கே உரிய தனித்த கட்டமைப்பும் ( செயலவைக் குழுமம்)அதற்குரிய பொறுப்பாளர்களும் தங்கள் சமூக நலனை மலாக்கா இந்து மன்னர்களிடம் எடுத்துக் கூறி உறவைப் பேணியவர்கள் என்ற தகவலும் உண்டு. மேலும், போர்த்துக்கீசியர் மலாக்காவைக் கைப்பற்றிய போது தங்கள் பாது காப்பைக் கருத்திற்கொண்ட இச்சமூகம், எதிராளிக்குக் கணிசமான பங்களிப்புச் செய்ததும் இங்குக் கவனிக்கத்தக்கது. போர்த்துக்கீசியரின் தலைமைக் கடற்படைத் தளபதி அல்போன்சோ டி அல்புகர்க் எழுதிய குறிப்பில் இச்செய்தி காணக் கிடைக்கிறது. போர்த்துக்கீசியர் மலாக்காவை வென்றதன் வாயிலாக அதற்குக் கைம்மாறாய் மலாக்கா செட்டிக்கு உயர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்புகளும் உள்ளன. போர்த்துக்கீசியருக்குப் புரிந்த அளப்பரிய உதவியால் மலாக்கா செட்டிகள் தங்கள் வணிகத்தை இடையூறுமின்றி நடத்தவும் முடிந்தது. ஒரு கதவு திறக்க மறு கதவு அடைக்கப்படும் என்பதுபோல டச்சுக்காரர்கள் வந்த பின்பு (1641-1824) இவர்களின் தலைவிதி மாற்றியமைக்கப்பட்டுப் பழைய செல்வாக்குச் சரிந்தது. மேற்கத்தையவர்களின் இராட்சச கப்பல்களுக்கு முன் இவர்களின் சிறு வணிகக் கப்பல் தொய்விழந்தது. இதன் காரணமாக விவசாயம் உட்பட வேறு பல தொழில்களை நாடிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இவர்களுக்கு ஏற்பட்டது. இது காறும் இவர்கள் வசித்து வந்த கம்போங் கிலீங் என்ற கிராமத்தையும் டச்சுக்காரர்கள் பறிமுதல் செய்து அதற்கு டச்சுக் கிராமம் என்று பெயர் சூட்டிக் கொண்டாலும் செட்டிமார்களில் சிலருக்கு அங்கு வசிக்க வாய்ப்பும் கிடைத்தது. டச்சுக் கவர்னர் போர்ட் (Gabenor Bort) இவர்களுக்கு ஒரு காணி நிலத்தையும் நிலப் பட்டாவையும் கொடுத்து அங்குச் சிறீ பொய்யாத விநாய கர் கோயிலையும் எழுப்ப வகை செய்தது. இக்கோயி லில்தான் மலாக்கா செட்டிகளின் விலைமிகு உடைமை களும் சொத்துகளும் பழம்பொருட்களும் வைக்கப்பட் டுள்ளன. அதே காலக்கட்டத்தில் இவர்களுக்கு மற்றப் பகுதிகளில் குடியிருப்பையும் உருவாக்கிக் கொடுத்தனர். கவர்னர் போர்ட் அறிக்கையின்படி, 1678 ஆம் ஆண்டில் மட்டும் 761 மலாக்கா செட்டிகள் இங்கு வசித்துள்ள தாகக் குறிப்பிட்டுள்ளார். இசுலாத்தில் ஐக்கியப்பட்ட செட்டிகளுக்கு இக்கோயிலுக்குப் பக்கத்தில் மசூதியை நிறுவுவதற்கும் வாய்ப்பளித்துள்ளனர். அம்மசூதி இன்றளவும் உள்ளது.அதன் பெயர் 'மஸ்ஜிட் கிலிங்'.

இதற்கிடையே, 19 ஆம் நூற்றாண்டில் ஒப்பந்தக் கூலிகளாய் இழுத்துவரப்பட்டவர்களுக்கும் மலாக்கா செட்டி சமூகத்தவருக்கும் எவ்வித உறவுமில்லை. இவர்கள் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்பதைப் போலிராமல் மலாக் காவையே தங்கள் பிறந்த மண்ணாகக் கருதுகின்றனர். நெல் விவசாயம் செய்தபோது இந்துக்களைப்போல் சிறு தெய்வ வழிபாட்டைத் தீவிரமாக நடத்தி வந்தனர். இவ்விடந்தான் இப்போது காஜா பெராங் என்றழைக் கப்படுகிறது. மலாக்கா செட்டிகள் நிறுவிய கோயில்கள் பின்வருமாறு:

பெரிய ஆலயங்கள் :
ஃ சிறீ பொய்யாத விநாயகர் கோவில் (1781)
ஃ சிறீ முத்து மாரியம்மன் (1822)
ஃ கைலாசநாதர் சிவன் ஆலயம் (1887)
ஃ சிறீ அங்காளம்மன் பரமேசுவரி ஆலயம் ( 1888 )
ஃ சிறீ காளியம்மன் ஆலயம் ( 1804 )

சிறிய ஆலயங்கள் :
ஃ லிங்காதரியம்மன்
ஃ அம்மன் ஆலயம்
ஃ தர்மராஜா ஆலயம்
ஃ கட்டையம்மன் ஆலயம்
ஃ ஐயனார் ஆலயம்

இந்த ஆலயங்களை நிர்வகிப்பதற்கு மலாக்கா செட்டிகளிடம் பொருளாதார வலு இல்லாமையால் திரௌபதியம்மன் ஆலயம் சிலோன் தமிழரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. பொய்யாத விநாயகர் கோவிலைச் செல்வச் செழிப்புப் பொருந்திய நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் தாங்கள் நிர்வகிக்க அனுமதி பெற, அதன் பின்னர் நாட்டுக் கோட்டைச் செட்டியார் கள் அக்கோயிலைப் பராமரித்து வருகின்றனர். ஆனாலும், ஒப்பந்த அடிப்படையில் நோக்குங்கால் இக்கோயில் இன்னமும் மலாக்கா செட்டிகளினுடையதே.

ஆங்கிலேயர்களின் காலத்தில் (1824-1941) செட்டி சமூகத்துக்குத் தனிச் செல்வாக்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. மறைந்த தேவநாயகம் செட்டி, லைனா அண்ணாமலை செட்டி, எல்.கனகசபை செட்டி, எம்.டி.பிள்ளை, தி.சொக்கநாதன் பிள்ளை போன்றோர் ஆங்கிலேயரால் கௌரவிக்கப்பட்டவர்களாவர்.

தற்பொழுது வசித்துவரும் மலாக்கா செட்டிமார்கள் ஐந்தாவது தலை முறையைச் சேர்ந்தவர்களாவர். ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்த பதின்ம வயதினரின் சமூகம் குறித்த சிந்தனையைப் பிறகு விளக்குகிறேன். என்னுடன் உரையாடிக்கொண்டிருந்த இந்த நான்காவது தலைமுறைக்கு எப்படியும் ஐம்பது வயதைத் தாண்டியி ருக்கும். கம்போங் கிலீங்கில்தான் இவரின் முன்னோர் வாழ்ந்து வந்தனர். ' கிலீங்' என்ற சொல்லுக்குப் பல்வேறு வியாக்கியானங்கள் இருந்தபோதும், தற்போது அது தமிழர்களைப் பழிக்கும் பொருட்டுக்காகவே பிற இனத்தவரால் பிரயோகப்படுத்தப்படுகின்றது. அதில் பிரபலமான ஒன்று ' பாம்பையும் கிலீங்கையும் கண்டால் முதலில் கிலீங்கைத் தன் அடித்துக் கொல்ல வேண்டும்!' இந்த வாசகத்தின் பின்னணியில் தமிழர் சமூகத்தின் வளர்ச்சியும், பிறருக்கு அவர்கள் மீதிருந்த காழ்ப் புணர்ச்சியும் பொறாமையும் தெரிய வரும். கால்களில் சலங்கைகளை அணிந்து வணிகம் செய்தமையாலும் ( கிலீங் !கிலீங்! என்ற ஓசை), 'கலிங்'கப்பட்டணத்திலிருந்து வந்தமையாலும் இச்சமூகத்துக்கு இப்பெயர் தோன்றியதை இந்நாட்டின் வரலாறு கமுக்கமாய் மறைத்துவைத்திருக்கிறது. Kain Pelekat எனப்படும் மலாய் சமூகத்தவரின் பாரம்பரிய உடைகூட இவர்களின் வாயிலாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. மலாய் மொழி அகரமுதலியில் கிலீங் என்ற சொல்லுக்கு இவ்வகை உடையணிந்த இசுலாமியர்கள் என்றே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. 14 ஆம் நூற்றாண்டில் இக்கிராமம் மலாக்கா துறைமுகத்தையொட்டி அமைந் திருந்தமையால் இவர்கள் வணிகத்தில் முழு வீச்சுடன் ஈடுபட்டிருக்கலாம் என்பதைத் தாராளமாக நம்பலாம். மதிநுட்பம், உழைப்பு, செல்வம் ஆகிய மூன்றும் இருந்த மையால் உள்ளூர்ப் பெண்கள் துணிந்து இவர்களைத் தங்கள் வாழ்க்கைத் துணைகளாக ஏற்றுக் கொண்டனர். இந்த ஆண்மக்கள் தென்மேற்குப் பருவக் காற்று (மே- செப்டம்பர்) வீசும் வரை மலாக்காவில் தங்கள் மனைவிய ரோடு தங்கிவிட்டு, காற்று ஓய்ந்தபின் மீண்டும் கடல் வாணிபம் செய்யப் புறப்பட்டனர். நமது மரபின்படி, ஆண்கள்தான் பொருளீட்டச் செல்ல வேண்டும். இந்தப் பிரிவால் அவர்களுக்கு வாய்த்த குறுகிய காலத்தில் தமிழைத் தங்கள் குடும்பத்தாருக்குக் கற்றுத் தர வாய்ப்பின்றிப் போனது. ஐதீ க மற்றும் கலாச்சாரக் கூறுகளை மட்டும் விட்டுச் செல்ல அவை கொடிபோல் வழிவழியாய்ப் படர்ந்தன; மொழியோ மறக்கப்பட்டது. அப்படிச் சென்றவர்களுள் பலர் திரும்பி வரமுடியாமல் போயிருக்கலாம் அல்லது கடல் சீற்றத்துக்குப் பலியாகியு மிருக்கலாம். மலாக்கா நீரிணையிலும் இவர்களின் கப்பல்கள் சில மூழ்கியுள்ளன. 1990 களின் பிற்பகுதியில், நகர விரிவாக்கத்திற்காக மலாக்கா கடற்கரையைத் தூர்த்தபோது மண்வாரி இயந்திரங்கள் தோண்டிய மணலில் இந்தியத் துணைக் கண்டத்தின் குறிப்பாகத் தமிழகத்துப் புராதன பொருட்களும் சில சிலைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில இப்பொழுது காஜா பெராங்கில் (காஞ்சிபுரம்) உள்ள மலாக்கா செட்டி தொல்பொருட்காட்சிச் சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

14 ஆம் நூற்றாண்டில் மலாக்காவுக்குப் பரமேசு வரா என்ற இந்து மன்னன் பெயர் சூட்டியது உண் மையாயினும், இதைக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாக மாற்றிய பெருமை மலாக்கா செட்டி மார்களையே சாரும். மலாக்கா அரண்மனையில் 'Dato Bendahara' போன்ற பெரும்பதவிகளில் இடம் பெற்றதோடு, மீனவ கிராமமாக இருந்த மலாக்காவை வணிக விருத்தி செய்து அளப்பரிய பங்கை யாற்றியுள்ளனர். மலாய் இலக்கிய நூலான 'Sejarah Melayu' வில் இவர்கள் வசித்த கம்போங் கிலீங் என்ற கிராமம் பரபரப்பான வணிகத்தில் இயங்கியதைக் குறிப்பிட்டுள்ளது.1424 ஆம் ஆண்டு பரமேசுவரா மன்னன் , பாசாய் (வட சுமத்திரா ) இசுலாமிய இளவரசியை மணமுடித்த பின்பு 'Sultan Iskandar Shah' எனும் பெயரையேற்க, மலாக்கா வாழ்மக்களும் இசுலாத்திற்கு மாறியபோது மலாக்கா செட்டிமார்களில் சிலரும் மதம் மாறினர் என்பதை மறுப்பதற்கில்லை. எஞ்சிய சிலரே இந்து பண்பாட்டில் உறுதிப்பாட்டுடன் இருந்தனர். அவர்களின் வழித்தோன்றல்கள்தான் இன்றிருக்கும் மலாக்கா செட்டிகள்! கூடக் குறைவாகத் தற்போது 50 குடும்பங்கள்தான் இருக்கின்றன.

இதே இனக்கலப்புச் சூழல்தான் (assimilation) அதே காலக்கட்டத்தில் மலேசியாவில் குடியேறிய சீன சமூகத்துக்கும் நேர்ந்தது. பண்பாட்டில் சீனத்தையும் மொழிப் பயன்பாட்டில் செட்டிகள் போல் மலாய் மொழியையும் தொடர்பு மொழியாகவே புழக்கத்தில் கொண்டுவந்துள்ளனர் சீன வழித்தோன்றல்கள். இச்சமூகத்தவரை ஆண்களை 'Baba' என்றும் பெண் களை 'Nyonya' என்றும் அழைக்கப்பட்டு வருகின்ற னர்.இதேபோல, 15 ஆம் நூற்றாண்டில் மலாக்காவை ஆண்ட போர்த்துக்கீசிய சமூகத்தவரும்கூட உள்ளூர்ப் பெண்களைத் திருமணம் புரிந்து கொண்டு 'Serani' எனும் அடையாளத்தை நிறுவியுள்ளனர். தற்போது இவர்கள் வாழ்ந்து வருகின்ற குடியிருப்புப் பகுதி 'Portugis Settlement' என்றழைக்கப்பட்டு வருகிறது. தனித்துவமிக்க இம்மூன்று சமூகங்களும் மலாக்காவைத் தவிர மலேசியாவின் பிற மாநிலங்களில் காணவே முடியாது. மலேசியாவின் பழைய சமூகம் என்று அங்கீகரிக்கப்பட்டிருப்பினும், இவர்களுக்குப் பூமி புத்ரா (மண்ணின் மைந்தர்) என்ற தகுதி இன்னமும் வழங்கப் படாமல் இரண்டாந்தர குடிகளாகவே நடத்தப்பட்டு வருகின்றனர். (ஆனால், 'Serani' சமூகத்துக்கு இந்தத் தகுதி வழங்கப்பட்டுவிட்டதாக அறிகிறோம்). இசுலாம் சமயம் கீழை நாடுகளுக்கு வருவதற்கு முன்பே இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து மண்ணை மேம்படுத்தியி ருப்பினும் இவ்விரு சமூகங்களும் இன்னும் மண்ணின் மைந்தர்களாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதற் காகவே பல காலமாக அரசியல் ரீதியாகவும் அமைதி வழியிலும் போராடி வருகின்றனர். மிகக் குறைந்த எண் ணிக்கையிலான இவர்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதில்லை. அண்மைய காலத்தில் சிறு அளவிலான மாற்றம் அடைந்துள்ளதையும் மறுக்க முடியாது. மலாக்கா செட்டிகளைப் பொறுத்தமட்டில் மொழியைத் தவிர அவர்களின் பெயர்களும் சமய சடங்குகளும் விழாக்களும் இந்து முறைப்படியும் தமிழ்ப் பெயர்களையும் கொண் டிருப்பதால் இந்தியர்களாகவே சுட்டப்படுகின்றனர். இந்துக்கள் கொண்டாடும் அனைத்துப் பண்டிகைகளை யும் நம்மைக் காட்டிலும் விமரிசையாக் கொண்டாடி வருகின்றனர். கோயில் திருவிழாக்களில் இந்த விழுமியத் தைக் காணலாம். தாய்மொழி மலாய் மொழிதா னென்றாலும் இந்து சமயத்தவர் என்ற ஒரே காரணத் துக்காக இவர்கள் கவனத்திற்கப்பாலாகிவிட்டார்களோ என்னவோ? எனவே, இவர்களுக்குச் சிறப்புச் சலுகை வழங்கப்படுவது முறையல்ல என்பது அரசின் வாதம். தொடக்கக் காலத்தில் மலாக்காவை வளப்படுத்திய வணிகர்களாகத் திகழ்ந்திருந்தாலும், காலவெள்ளத்தில் அச்சிறப்பையெல்லாம் இழந்து சராசரி தொழிலிலும் குறைந்த வருமானத்திலுமே இவர்களின் இன்றைய வாழ்க்கைப் படகு நகர்கிறது. நன்கு படித்தவர்கள் தொழில் காரணமாக நாட்டின் பெருநகரங்களில் இடம்பெயர வேண்டிய கட்டாயத்திற்கு இலக்காகியுள் ளனர். ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றைப் பெற முடியும் என்பதால் சுயத்தை அடைமானம் வைக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். மத்தளத்தின் இரு பக்க அடி போல்தான் ஐந்து நூற்றாண்டுகளாக இவர்களின் இருத்தல் இந்நாட்டில்.

இச்செட்டிச் சமூகத்தின் பெரும்பாலோர் வெளிப்பார்வைக்கு ( தோலின் நிறம் ) மலாய்க்கார, சீன கலப்பைக் கொண்டவர்கள் போல் தோற்றமளிப்பர். முதியவர்கள் மலாய்க்காரர் சார்ந்த உடைகளைத்தான் அணிகின்றனர். இவர்களின் முதல் தலைமுறையைப் பார்ப்பதற்கு அசல் மலாய்க்காரர்களைப் போலவே அனைத்திலும் தோற்றமளித்தனர். இன்றுள்ள இளவயது பெண்கள் அவ்வப்பொழுது சேலை அணிவதையும் பார்க்கமுடிகிறது. மலாய் மொழியைத் தங்கள் தாய்மொழியாகவும் இந்து சமயத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாகவும் இரு கண்களாய்க் கொண்டுள்ளனர். இந்த இரண்டு கூறுகளையும் விட்டுக் கொடுக்க இவர்கள் தயாராயில்லை. இந்த மரபை உடைக்கும் திருமணத்தையும் மதமாற்றுச் சூழலையும் எதுவாயினும் ஒரு போதும் இவர்கள் அனுமதிப்பதில்லை. இதுதான் இந்தச் சமூகத்தின் அழுத்தந்திருத்தமான அடையாளம்.

பதினாறு வயது மதிக்கத்தக்க ஜீவனேசுவரன் மற்றும் பிரவீன் ஆகிய இருவரையும் காஜா பெராங்கில் உள்ள செட்டி கிராமத்தில் அவர்களின் இல்லத்திலேயே சந்திக்க நேர்ந்தது. வீட்டின் அமைப்பு முறை மலாய்க் காரர்களின் வீட்டை நினைவுபடுத்தியது. வாயிலில் தெய்வப் படமும் தோரணங்களும் காட்சி தந்தன. மலாயிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே உரையாடியபோதும் அவர்களின் கைப்பேசியில் தமிழிசையும் தமிழ்ப்பாடல்கள் மட்டுமே ஒலிக்கின்றன. அவற்றின் பொருள் கொஞ்சம் தெரியும் என்றனர். இருவருமே மலாய்க்கார சமூகம் பேசுகின்ற ஒலி உச்சரிப்பு, பொழிப்பு முறைகளையே கையாளுகின்றனர். பெற்றோரிடமும் அப்படித்தான் அளவளாவுகின்றனர். சமையல் வகையறாக்களில் இந்திய-மலாய் சமூகத்தவரின் ஆதிக்கமிருப்பினும் நம்மைப்போல சில வகை புலாலை முற்றிலும் மறுக்கின்றனர். தலையில் அணிகின்ற 'Kopiah" கூட மலாய்க்காரர்களைப் போலிருந்தாலும், இந்திய முப்பாட்டன் பயன்படுத்திய தனித்துவமிக்க அடையாளம் அதில் பளிச்சிடுகிறது. முன்னொரு காலத்தில் வணிகராய் இங்கு வந்திறங்கியபோது தலையில் பெரியதொரு துவாலைத் துண்டை முக்கோண வடிவைப்பில் மடித்து அணிந்து கொண்டு வேலை செய்வார்களாம். அதுவே காலப்போக்கில் அவர்களின் அடையாளமாய் நிலைத்துவிட்டது. இந்து சமய நெறி ஆழமாக வந்தடை யவும், தேவாரத் திருவாசகத்தைத் தடுமாற்றமின்றி உச்சரிக்கவும் வார இறுதியில் இங்குள்ள Dato Cha Char எனும் அம்மன் ஆலயத்தில் தமிழாசிரியரைக் கொண்டு தமிழ் கற்பிக்கப்படுகிறது. இந்து சமயத்தை ஆழமாகக் கற்க வேண்டியே அவர்கள் தமிழைக் கற்று வருகின்றனர். வீட்டில் தமிழ் மொழி புழக்கமின்றி மொழியின் சரளம் எவ்வாறு கைக்கூடும் என்பது எனக்குள் கேள்வி எழுந்தது. இதற்குப் பதிலுரைக்க யத்தனமடைந்தனர். "இதுதான் எங்களின் அடையாளம். மற்றவர்கள் எண்ணுவதுபோல் நாங்கள் முழுக்க முழுக்கத் தமிழர்கள் அல்லர். எங்களைத் தமிழராகப் பார்க்காதீர்கள். அப்பாவின் வழி எங்கள் முதல் தாத்தா, தமிழர்தான். ஆனால், எங்கள் கொள்ளுப் பாட்டி முதல், இன்றைய அம்மா வரை யாரும் தமிழரல்லரே! அவர்கள் தமிழையே பேசியதில்லை! இம்மண்ணைச் சேர்ந்த பெண்கள்! மேலும்,அவர்கள் இசுலாத்திற்கு முந்தைய மலாய்க்காரப் பெண்கள், ஜாவானியப் பெண்கள், சீனப் பெண்கள், பாத்தாக் பெண்கள்தானே? இப்படியிருக்க எங்ஙனம் தமிழ் எங்களுக்குத் தாய்மொழியாக இருக்க முடியும்? தமிழகத்திலும் எங்களுக்கு இரத்த உறவுடையோர் இருப்பதை எப்படி அடையாளம் காண்பது? ஆனாலும்,பிற மொழிகளைவிட தமிழை அதிகமாகவே நேசிக்கிறோம். ஆனால், தலைவர்கள் சிலர் எங்களுக்குத் தமிழ் மொழிப் பற்றில்லை என்று கோடி காட்டியபடி வரலாறு தெரியாமல் பேசி வருவது வேதனையளிக்கிறது. நாங்கள் தனித்து நின்று வாழ்வை அடையாளப்படுத்துவது தவறா?" எனக் கேட்கின்றனர் இந்த மூன்றாம் படிவ இளைஞர்கள் இருவரும். எதிர்காலத்தில் காஜா பெராங் கிராமத்தை விரிவாக்கம் செய்து தமது செட்டி சமூகத்தின் இருத்தலை உறுதிபடுத்த அரசிடம் முறையாகக் கோரிக்கை வைத்து அதை எப்படியும் நிறைவேற்றப் போவதாகத் தீர்க்கமுடன் கூறினார் இத்தலைமுறையைச் சேர்ந்த ஜீவனேசுவரன். எந்தவொரு சமூகமும் தாம் குறுகிப் போவதையுணரும் பொழுதுதான், பெரிய பெரிய இலட்சியங்கள் கிளர்ந்தெழும். இன்று மலாக்கா செட்டிக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிற அச்சம், நாளை...?

ஜீவனேசுவரனின் அப்பா திரு S.K.பிள்ளை ,அம்மாவோ 'Nyonya' சமூகத்தைச் சார்ந்தவர். நமக்குக் காணக் கிடைக்காத பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய அரிய கலைப் பொருட்களைக் கண்ணாடிப் பேழையில் கண்போல பத்திரப்படுத்தி வைத்துள்ளனர். இவை தங்கள் மூதாதையருடையவை என்று பெருமிதம் பொங்கக் கூறினார். நம்மவர் வழக்கில் இருந்த வெற்றிலை பாக்கு இடிக்கும் கருவி போன்ற சில கருவிகள் இன்று மலாய்க்காரச் சமூகத்தில் புழக்கத்தில் உள்ளன என்பது வேறு விஷயம்.

இவர்களின் சுவடுகள் குறித்த சேகரிப்புகள் காஜா பெராங் சாலையில் அமைந்துள்ள 'மலாக்கா செட்டி தொல்பொருட்காட்சிச் சாலையில்' காணலாம். அங்குக் காசி சிவ மகாராணி என்பவர் என்னை வரவேற்றுத் தமிழில் உரையாற்றினார். இவரது அப்பா தமிழர் என்றும் அம்மா மலாக்கா செட்டி சமூகத்தவரைச் சேர்ந்தவரென்றும், இங்குள்ள குபு தமிழ்ப்பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பெற்றதாகவும் கூறினார். இப்பொருட்காட்சிச் சாலையில் இவர்களின் வரலாற்றை விட, கலை, கலாச்சார, பண்பாட்டுக் கூறுகளைக் காட்டும் பழைமை வாய்ந்த படங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. இவர்களைப் பிரதிநிதித்த தலைவர்களின் உருவத் தோற்றங்கள் கொண்ட படங்களைப் பார்த்தால் இவர்கள் புறப்பட்ட புள்ளிக்கும் தமிழர்களுக்கும் ஒட்டு உறவே இல்லையோ என்பதை உணர்த்தும். அப்படியொரு வேறுபாடு உருவத்திலும் உடையிலும்.

நான் அவ்விடத்தைவிட்டு அகன்றபோது எனக் குள் சித்தப்பிரம்மை பிடித்தது மாதிரி இனம்புரியாத மையமொன்று அவர்களின்பால் ஒட்டிக்கொண்டேயிருந்தது. இந்த நிமிடம் வரை என் நாளங்களில் வழிந் தோடும் அணுக்களில் ஒன்று துள்ளிக் குதித்துக் கொண்டேயிருக்கிறது. வேறுபாடு என் கண்களுக்குத் தெரியவில்லை. ஏன்?!

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768