இதழ் 10
அக்டோபர் 2009
  கதையும் நாடகப்பொருளும்
இராம. கண்ணபிரான்
 
     
  பத்தி:

ஒரு மாட்டுத்தலை காதில் சொல்லிப் போன சேதிகள்

சீ. முத்துசாமி

எனக்குத் தெரிந்த மழை
யோகி


மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை; ஓர் இலக்கியப் பார்வை
சு. யுவ‌ராஜ‌ன்


கட்டுரை:

கதையும் நாடகப்பொருளும்
இராம. கண்ணபிரான்

மலைகள் மீதொரு ராட்சத யாளி
ஜெயந்தி சங்கர்


சிறுகதை:

பதிஎழு அறியாப் பழந்தமிழ் மக்கள்
அ.ரெங்கசாமி


மண் மீதும் மலை மீதும் படர்ந்திருந்த நீலங்கள்!
கோ.முனியாண்டி


தொடர் :


பல வேடிக்கை மனிதரைப் போல...3
"தமிழ் எங்கள் ...யிர்"

ம‌.ந‌வீன்


பரதேசியின் நாட்குறிப்புகள் ...3
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...3
இளைய அப்துல்லாஹ்

செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...8
சீ. முத்துசாமி


கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...1


ஜி.எஸ். தயாளன்


எம். ரிஷான் ஷெரீப்

ஷிஜூ சிதம்பரம்

புனிதா முனியாண்டி

சேனன்

ரேணுகா


பதிவு:

வல்லினம் இதழ் ஏற்பாட்டில் 'கலை இலக்கிய விழா'

ம. நவீன்


விமர்சனம்:

வல்லினம் கவிதைகள்

ஜாசின் ஏ.தேவராஜன்

வல்லினம் சிறுகதைகள்

சு. யுவ‌ராஜ‌ன்

"வல்லினம்" – ஒரு பார்வை (செப்டம்பர் மாத வல்லினம் இதழ் விமர்சனம்)

கவின் மலர்


புத்தகப்பார்வை:

மஹாத்மன் சிறுகதைகள்

சிவா பெரியண்ணன்


எதிர்வினை:

புத்தர், போதிமரம், சரணம் மற்றும் மரணங்கள்

தர்மினி

     
     
 

(1)

பேராசிரியர் நந்தகிஷோர் ஆச்சார்யா, மகாபாரதம் கூறும் வழக்கமான கதையில் வருகின்ற பீஷ்மர் சபதம், குருஷேத்திரப் போருக்குப் பிந்திய பாண்டவர் இராஜ்ஜியம் முத‌லிய‌க் கூறுக‌ளை ஆதார‌மாக எடுத்துக்கொண்டு, ம‌ஹாபார‌த‌க் க‌தையின் ஊடே தென்ப‌டும் சாத்திய‌ப்பாடுக் கதை அம்சங்களைத் தம் கற்பனையில் உருவாக்கி, பீஷ்மர் சபதம் வெவ்வேறு நிலைகளில் எதிர்நோக்கும் சவால்கள், குருவம்சத்து வாரிசுகள் கோரும் இராஜ்ஜிய அரசுரிமை போன்றவற்றைப் பின்னணிச் செய்திகளாக ஆக்கி, அரண்மனைப் பெண்டிர் (அனுபவித்த உடல் - மன வேதனைகளை இன்றைய) பார்வையில் தருகிறார், ‘அஸ்தினாபுரம்’ என்ற தம் இந்தி நாடகத்தின் மூலம். இதனைச் சரஸ்வதி ராம்நாத் தமிழாக்கித் தந்திருக்கிறார். ‘மகாபாரதத்தில் பெண்ணியம்’ என்ற தம் மொழிபெயர்ப்பு நூலில்.

(2)

சந்தனு மஹாராஜா ஒரு நாள் வேட்டைக்குச் செல்லும்போது, இளம்பெண் சத்யவதியைக் கண்டு அவள்மீது மையல் கொள்கிறார். திருமணம் புரிந்தால், தம் மகள் சத்யவதியின் வாரிசுகளே சந்தனுவின் நாட்டை ஆளும் உரிமையைப் பெற வேண்டும் என்று சத்யவதியின் தந்தை அவரிடம் கோரிக்கை விடுகிறார்.

சந்தனு இராஜாவின் மூத்த மனைவி கங்காதேவி மூலம் பிறந்திருந்த பீஷ்மர், தம் தந்தையின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, தமக்குச் சூடப்பட்டிருந்த யுவராஜா பட்டத்தைத் துறந்து, எதிர்காலக் குருவம்ச அரச பதவிக்குத் தம்மால் எந்த இடையூறும் வரக்கூடாது என்பதற்காக, தம் ஆயுள் முழுவதும் பிரம்மச்சரிய விரதம் பூண்டு நிற்பதாகச் சபதம் செய்கிறார். அதன் பிறகு, சந்தனு மன்னருக்குச் சத்யவதி இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படுகிறாள்.

சத்யவதிக்குச் சித்திராங்கதன், விசித்திரவீர்யன் என்ற இரு மகன்கள் பிறக்கிறார்கள். மன வலிமை குறைந்த சித்திராங்கதன் முதலில் இறந்துபோக, சந்தனு மஹாராஜாவுக்குப் பிறகு, விசித்திரவீர்யன் அஸ்தினாபுரத்தைத் தலைநகராய்க்கொண்டு இராஜ்ஜியத்தை ஆள்கிறான். கொஞ்ச காலத்திற்குப் பின்னர், காச நோயால் அவதியுற்ற விசித்திரவீர்யனும், சந்ததி இல்லாமல் மரணமடைகிறான். அவனுடைய அம்பிகா, அம்பபாலிகா என்ற இரு மனைவியரும் தம் இளம் வயதிலேயே விதவைகள் ஆகின்றனர். அஸ்தினாபுர இராஜ்ஜியம் அரசன் இல்லாமல் தவிக்கிறது. அன்றாட அரச காரியங்கள், சத்யவதி, பீஷ்மர் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.

(3)

இதுவரை நாம் கண்ட கதைக் கூறு, மகாபாரதம் சொல்லும் வழக்கமான கதையின் ஒரு பகுதி ஆகும். இனி, பீஷ்மரின் சபதம், கேள்விக்கும், குற்றச்சாட்டுக்கும் உள்ளாகும் நாடகக் காட்சிகளைப் பார்ப்போம்.

இரண்டாவது காட்சியில், பீஷ்மரும் அவரது சிற்றன்னை சத்யவதியும் உரையாடுகிறார்கள்.

“மகனே, உன் சபதம் எனக்கு வியாகூலத்தைத் தருகிறது. என் வயிற்றுப் பிள்ளைகள், சித்திராங்கதன், விசித்திரவீர்யன் ஆகியோரின் அரச உரிமையில் எந்தக் குறுக்கீடும் ஏற்படக்கூடாது என்றுதானே, என் தந்தை உன்னிடம் அந்த வாக்குறுதியைப் பெற்றார். இப்போது சந்ததியே இல்லாத நிலையில், உன்னுடைய சபதம் அர்த்தம் இழந்து நிற்கிறது. பீஷ்மா, நான் உனக்கு உன் சபதத்திலிருந்து விலக்கு அளிக்கிறேன். என் மகன் விசித்திரவீர்யனின் மனைவிகளாக இருந்த அம்பிகா, அம்பபாலிகா ஆகிய இருவரையும் நீ மணந்து கொண்டு, வம்ச விருத்திசெய்,” என்று சத்யவதி பீஷ்மரிடம் கூறுகிறாள்.

“தாயே, என் ஆயுள் பூராவும் பிரம்மச்சாரியாக இருப்பேன் என்னும் விரதத்தைப் பூண்டிருக்கிறேன். பெண்ணுடன் சரீரச் சேர்க்கை என்ற எண்ணமே, எனக்கு நடுக்கத்தைத் தருகிறது,” என்கிறார் பீஷ்மர்.

பெண்ணைக் கண்டு நடுங்கும் நீ, ஒரு கோழை. குருவம்ச வாரிசுக்குப் பயன்படாமல், என்றோ செய்த ஒரு சபதத்துடன் ஒட்டிக்கொண்டு, மூவுலகிலும் புகழ் அடைந்துவிட்ட ஒரு சுய பிம்பத்துடன் நீ வாழ்ந்துக்கொண்டிருக்கிறாய்” என்று சத்யவதி பீஷ்மரின் சபதத்தைக் குறை கூறுகிறாள்.

ஆறாம் காட்சியில் பீஷ்மர், இறந்துபோன தன் தம்பி விசித்திரவீர்யனின் மனைவி அம்பிகாவிடம் உரையாடுகிறார்.

“திருதராஷ்டிரன் பார்வை அற்றவன். பாண்டுவோ இரத்தச் சோகை பிடித்த நோயாளி. நீயும், அம்பபாலிகையும் என் மூத்த சகோதரர் வியாசரிடம் விருப்பம் இல்லாமல் உங்களை ஒப்படைத்தீர்கள். அதனால், இவர்கள் இருவரும் குறைகள் உடையவர்களாகப் பிறந்திருக்கிறார்கள். குருவம்சத்திற்கு ஆரோக்கியமான ஓர் அரசகுமாரன் வேண்டும். அதனால், சிற்றன்னை சத்யவதி, வியாசரை மீண்டும் நியோக் ஏற்பாட்டுக்கு இங்கு அழைத்திருக்கிறார்,” என்று பீஷ்மர் அம்பிகாவிடம் சொல்கிறார்.

“காசியில் முன்பு நடைபெற்ற எங்கள் சுயம்வரத்தில் நீங்கள் கலந்துகொண்டு, அங்கு வந்திருந்த பல நாட்டு இராஜகுமாரர்களை வென்றீர்கள். உங்களின் வலிமையும், வீரமும் என்னைப் பெரிதும் க‌வ‌ர்ந்த‌ன‌.அப்போதே உங்க‌ளை நான் என் மனத்தில் மணவாளராக வரித்துக் கொண்டேன். காசியிலிருந்து இங்கே அஸ்தினாபுரம் வந்தபிறகுதான், உங்கள் பிரம்மச்சரிய விரதம் பற்றியும், உங்கள் தம்பி விசித்திரவீர்யனுக்குத்தான், என்னையும் என் இரு சகோதரிகளையும் தாரங்களாகக் கொண்டு வந்திருப்பதைப் பற்றியும் நான் தெரிந்துக் கொண்டேன். இன்றுவரை உங்கள்பால் உள்ள என் காதல் உணர்வு குறையவே இல்லை. நியோக் உறவில், ஆண் பெண் இருபாலரிடமும் பரிபூரண சமர்ப்பணம் தேவை. அப்போதுதான் குழந்தை எந்த விக்கினமும் இல்லாமல் பிறக்கும். வியாசரின் முதல் தீண்டுதலில் நான் ஜடமாகிப் போனேன். மீண்டும் அவர் எதற்கு? இப்போது தாங்கள் இல்லையா? என்னைக் கலந்து வம்ச விருத்தி செய்யுங்கள். உங்களுக்கு ஏற்ற வகையில், என்னிடம் இன்னும் நிறையவே இருக்கிறது,” என்று கூறி, அம்பிகா தன் மனக் கதவைத் திறக்கிறாள்.

அப்போது தற்செயலாக அங்கு வந்த தன் மாமியார் சத்யவதியிடம், “பீஷ்மரின் சபதம், குருவம்சத்தின் வாரிசு விருத்திக்கு ஏற்பட்டுள்ள ஒரு சாபம். தம் தந்தை சந்தனு மன்னரின் கிழ வ‌ய‌துக் காம ஆசையை அன்றே இவர் தடுத்திருக்க வேண்டும். ஆனால், இவர் தம்மையே அவருக்குத் தியாகம் செய்தார். சந்தனு மகாராஜாவின் பலவீனத்திற்குப் பீஷ்மர் சபதம் வழியாகக் குருவம்ச நாடு ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும்?” என்று அம்பிகா வெடிக்கிறாள்.

நாடகத்தின் இரண்டாம் காட்சியில், சத்யவதி வம்ச விழுதுக்காகப் பீஷ்மரிடம் அவருடைய சபதத்தை விடும்படி கேட்டதையும், ஆறாம் காட்சியில் அம்பிகா தன் ஒரு தலைக்காதலைப் பீஷ்மரிடம் கூறி, அவருடைய சபதத்தைத் துறக்கும்படி வேண்டியதையும் நாம் இதுவரை கண்டோம்.

எட்டாம் காட்சி, தம் தந்தைக்குத் தாம் செய்திருந்த தியாகத்தாலும், தம் பிரம்மச்சரிய விரதத்தாலும் மூவுலகிலும் பெருமையடைந்திருந்த பீஷ்மர், குருவம்சத்தில் தூய இரத்த வாரிசு பற்றி ஒரு மதர்ப்பான எண்ணம் கொண்டிருந்தார் என்பதைக் காட்டுகிறது. இக்காட்சியில்தான் விதுரனின் அன்னை சுபா, பீஷ்மரிடம் நேரடியாக அவருடைய சபதத்தை இடித்துரைக்கிறாள்.

பாண்டுராஜா மரணமுற்றதும், பீஷ்மர் சத்யவதியின் ஆதரவோடு, திருதராஷ்டிரரை அஸ்தினாபுர அரியணையில் அமர்ந்திருந்த நேரம் அது.

“பார்வையற்ற திருதராஷ்டிரரைவிட, ஆரோக்கியமான என் மகன் விதுரன்தான் அரசாள எல்லாத் தகுதிகளும் பெற்றவன்,” எனச் சுபா பீஷ்மரிடம் வாதிடுகிறாள்.

அதற்குப் பீஷ்மர், “நீ ஏற்கெனவே அம்பிகாவுக்குத் தாதிப் பெண்ணாகப் பணி புரிந்தவள். நியோக் வழி, விதுரன் வியாசருக்கு உறவானவன்தான் என்றாலும், அவன் உன் வயிற்றில் பிறந்ததால், ஒரு சூத்திரன் ஆகிவிடுகிறான். ஷத்திரியன் பாண்டுவுக்கு, விதுரன் சகோதரன் என்றாலும், அவன் பாண்டுவுக்குப் பந்துவாகவே இருக்க முடியும்; அரசனாக முடியாது. குருசபையினரும், அமைச்சர் சபையினரும், பிரஜைகளும் விதுரனைக் குருவம்சத்தவனாக ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்,” என்கிறார்.

ஆவேசம் கொண்ட சுபா, “வாரிசு விஷயத்தில் இரத்தத் தூய்மை பற்றி, உங்களுக்கு இப்படி ஓர் அழுத்தமான எண்ணம் இருப்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது. அரண்மனைக் குருசபையிலும், அமைச்சர் அவையிலும் இருப்பவர்கள் உங்கள் வம்சத்தவர்கள்தானே! குருவம்சம் சார்ந்த நன்மைகளே, நாட்டுக்கும் நன்மைகள் பயப்பன என்று நீங்கள் எல்லோரும் சேர்ந்து கற்பிதம் செய்து, பிரஜைகளின் மனங்களிலும் ஒரு பொய்யான பிரமையை உருவாக்கி வைத்துள்ளீர்கள். பீஷ்மரே, நீர் சபதம் மேற்கொண்ட தினத்தன்றே உம்முடைய உண்மையான, தூய இரத்தம் கொண்ட குருவம்சம் செத்துப்போய்விட்டது,” என்று கொட்டுகிறாள்.

(4)

பேராசிரியர் நந்தகிஷோர் ஆச்சார்யா, ‘அஸ்தினாபுரம்’ என்ற தம் நாடகத்தை ஒன்பது காட்சிகளாக எழுதியிருக்கிறார். காட்சிகள் இரண்டு, நான்கு, ஆறு, எட்டு ஆகியவற்றை அவர் பின்னோக்குக் காட்சிகளாக அமைத்து, அவற்றில் பீஷ்மரின் சபதம் வேறுவேறு நிலைகளில் எதிர்நோக்கும் சவால்களையும், அவர் தம் குருவம்சத்தின்பால் காட்டிய பாரபட்சப் பிடிப்பையும் காட்டுகிறார்.

ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது ஆகிய ஐந்து காட்சிகளிலும், சுபாவும், குந்தியும் வயோதிகப் பெண்களாக விதுரர் இல்லத்தில் வீற்றிருந்து, ஓர் இரவு முழுவதும் அதிகம் உரையாடுவதாக நாடகாசிரியர் தம் கதைப்போக்கை அமைத்துள்ளார்.

பதினெட்டு நாள் குருஷேத்திரப் போரில், குருவம்சக் கௌரவர்களைத் தங்கள் வீரத்தால் வென்ற குருவம்சம் இல்லாத பாண்டவர்கள், அஸ்தினாபுர இராஜ்ஜியத்தை ஆளத்தொடங்கிய நேரம், திருதராஷ்டிரரும், அவர் மனைவி காந்தாரியும் காட்டுக்குச் செல்லவிருக்கிறார்கள். அவர்களுடன் போரிலே மடியாது எஞ்சியிருந்த குருவம்சத்தினரும், குந்தியும், விதுரரும் கானகம் செல்வதற்கு இருக்கிறார்கள்.

சுபா மட்டும் அஸ்தினாபுரத்திலேயே தங்கிவிடுகிறாள். அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பீஷ்மர் சபதம் மீதும், குருவம்சத்தின்பால் அவர் காட்டிய ஒருதலைப்பட்ச விசுவாசம் மீதும் சுபாவுக்குத் தாங்கவொண்ணா வெறுப்பு இருக்கிறது. அரண்மனைப் பெண்டுகள் சத்யவதி, அம்பா, அம்பிகா, அம்பபாலிகா ஆகியோரின் துயரங்களைத் தன் துயரங்களாகவே சுபா ஏற்றிருக்கிறாள். ஒரு வேலைக்காரியின் மகன் என்ற அடிப்படையில், விதுரனுக்கு அரச உரிமை இல்லாமல் போனதை வர்க்க ரீதியாகச் சுபா அனுபவித்திருக்கிறாள். அவளுடைய பார்வையில், குருவம்சத்தினர் இல்லாத பாண்டவர்கள் ஆளும் புது அஸ்தினாபுரமே, அவளுக்கு ஒரு விடுதலைப் பூமியாகப் படுகிறது.

நாடகத்தின் இறுதிக் காட்சியில், “குருவம்சமே இல்லாத ஓர் இடத்தில்தான், உனக்கு முக்தி என்ற எண்ணம் உனக்கு ஏன் அம்மா வந்தது?” என்று விதுரர் கேட்க, இள‌ம் பெண்ணான‌ ச‌த்ய‌வ‌தி , வ‌ய‌தான‌ ச‌ந்த‌னு ம‌ன்ன‌ரின் காம இச்சையைத் திருப்தி செய்வதற்கு, ஒரு கருவியாக இருக்க வேண்டிய நிர்ப்பந்த நிலையில் அவளது மனநிலையை நீ உணரமுடிந்திருந்தால், அம்பாவை எவரும் ஏற்கத் தயாராக இல்லாத நிலையில்தான், அவளுடைய அகால உயிர்த் துறப்பு ஏற்பட்டது என்ற உண்மையை நீ அறிய நேர்ந்திருந்தால், தங்களுடைய விருப்பங்களுக்கு மாறாகத் தங்களின் உடல்களை ஒருவருக்கு ஒப்படைக்க வேண்டியிருந்த அம்பிகா, அம்பபாலிகா ஆகியோரின் மன வலிகளையும், உடல் வலிகளையும் நீ உணரமுடிந்திருந்தால், ஆணாதிக்கம் மிக்க குருவம்ச அரண்மனையில், பெண்டிரின் வேதனைகள் எத்தகையன என்பது உனக்குச் சரியாகப் புரிந்திருக்கும். குருவம்சமே இல்லாத அஸ்தினாபுரம் என்ற இந்த விடியல் இடத்தில், எதற்காக என் விடுதலை எண்ணம் பதிந்திருக்கிறது என்பதும் உனக்குத் தெளிவாகியிருக்கும்,” என்று விரிவாகப் பதிலுரைக்கிறாள் சுபா.

(5)

நாடகத்தின் முதல் காட்சியில் காணப்படும் தொடக்க வரிகளும், இறுதிக் காட்சியில் இடம்பெறும் வரிகளும், நாடகப்பொருளை வாசகர் விளங்கிக் கொள்ள உதவுகின்றன.

“எந்த மகாராஜாவுடன் நீ இரவு உணவு அருந்தினாய், விதுரா? திருதராஷ்டிரருடனா? அல்லது யுதிஷ்டிரருடனா?” என்று விதுரரிடம் சுபா கேட்கும் முதல் காட்சி வரிகள், நாடகக் கருப்பொருளைச் சூசகமாக உணர்த்துகின்றன.

“குருவம்சத்துத் திருதராஷ்டிரன் இல்லாத அஸ்தினாபுரத்தில்தான் என் விடுதலை உள்ளது,” என்று விதுரரிடம் சுபா கூறும் இறுதிக் காட்சி வரிகள், தன் துயரங்களுக்கும், தன் சகப் பெண்களின் துயரங்களுக்கும் துணிவாய்க் குரல் கொடுத்து, தன் எஞ்சிய இருப்பை எங்கே வாழ வேண்டும் என்று தெரிவுசெய்கின்ற‍ தன்னிச்சையாய் முடிவெடுக்கும் ஒரு பெண்ணின் இந்தத் சுதந்திரச் செயல்பாடுதான், ‘அஸ்தினாபுரம்’ என்ற நாடகத்தின் பாடுபொருள் என்பதைத் துல்லியமாகக் காட்டுகின்றன.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768