முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 33
செப்டம்பர் 2011

  இலக்கியத்தைக் கொல்பவனின் சாட்சியம்: றியாஸ் குரானாவின் கவிதைகள்
கே. பாலமுருகன்
 
 
       
கட்டுரை:

மரண தண்டனை என்பது மனித விழுமியங்களுக்கு எதிரான ஊழல்
ரவிக்குமார்

இலக்கியத்தைக் கொல்பவனின் சாட்சியம்: றியாஸ் குரானாவின் கவிதைகள்
கே. பாலமுருகன்

மெல்ல தொடங்கும் அரசியல் விழிப்புணர்வு!
கெ. எல்.

கப்பலுக்குப் போன மச்சான்

எம். கே. குமார்

புலம்பெயர் முகங்கள்
வி. ஜீவகுமாரன்

பிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்
எம். ரிஷான் ஷெரீப்



பத்தி:

உயிர்ப்பு

ஷம்மிக்கா



பதிவு:

எஸ். ராமகிருஷ்ணனுடன் கழிந்த நாள்களும் கழியாத நினைவுகளும்
தயாஜி



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...15
எம். ஜி. சுரேஷ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


நிலத்தினும் பெரிதே
ரவிக்குமார்

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...23

மாதங்கி

ஆ. மாரிமுத்து

ம. நவீன்

ந. பெரியசாமி

“நான் கவிதை சொல்லி, கவிஞனில்லை”- றியாஸ் குரானா

ஒரு கவிதையைக் கொல்ல முடியுமா? அல்லது கவிதை என நாம் நம்பிக்கொண்டிருக்கும் ஒரு வெளியை வேரறுத்து புதிய கதைப்பரப்பை அதற்குள் நுழைக்க முடியுமா எனக் கேட்டால், அந்தக் கேள்வி சமக்காலத்துக் கவிதையைப் புரிந்துகொள்வதற்கான ஒரு முறைமையாக இருக்கும் என நினைக்கிறேன். மேற்கண்ட கேள்விகளுக்கான பதிலைத் தேட முயன்ற நான் அதை றியாஸ் கவிதைகளுக்குள் கண்டடைந்திருப்பதாக ஒரு குற்றசாட்டை முன்வைக்கிறேன். கவிதைக்கு ஒரு கூட்டுப் புரிதலை நோக்கிய ஒரு களம் அவசியம் தேவைப்படும் எனச் சொல்வதற்கில்லை. ஒரு கவிதை இன்று பல்வேறு சமயங்களில் பலவகைகளில் புரிந்துகொள்ளப்படுகின்றது. மனதின் அந்தரங்கமான மொழித்தான் கவிதை எனச் சொல்லப்படுகிறது. அந்தரங்கமான ஒன்று ஒரு மனிதனின் ஆழ்மனதுடன் பேசும் உரையாடலை எப்படிப் பொதுவிற்குக் கொண்டு வந்து கலந்தாலோசிப்பது? அல்லது விவரமாகக் கருத்துரைப்பது? இதுவே இக்காலக்கட்டத்தின் கவிதையை நோக்கி நாம் முன்வைக்கும் சவாலாகக்கூட இருக்கலாம்.

றியாஸ் தன் எழுத்தில் குறிப்பிட்டிருப்பது போல விமர்சனம் என ஒன்றை கவிதைக்குள் நுழைக்க முற்படும்போது அது மிகவும் வன்முறைமிக்க ஒரு பகுத்தறிவாக மாறுவதாக உணர்கிறேன். தன் புரிதலில் மிகவும் வசதியான ஒரு பகுதியை ஏற்றுக்கொண்டு அதைத் தரமிக்கதாகவும், தனக்கு புரியாததை அல்லது கவிதை எனும் ஒரு பரப்பிலிருந்து மீறல் செய்திருக்கும் எல்லாவற்றையும் தரமில்லாதவை எனவும் முடிவு செய்யும் பகுத்தறிவின் செயல்பாடு குறித்து றியாஸ் கொண்டிருக்கும் சிந்தனை மிக முக்கியமானதாகும். விமர்சனம் என்கிற பெயரில் தட்டையான பகுத்தறிவு சார்ந்து நாம் உருவாக்கும் மதிப்பீடு இலக்கியத்தைக் கொல்கிறது என்பதுதான் றியாஸ் குரானாவின் வாக்குமூலம். சார்புடைய விமர்சனங்களின் மூலம் மிகவும் அழுத்தமாக உருவாக்கப்படுவது இலக்கியத்தை அழிக்கும் அதனுடைய நிச்சயமற்ற வெளியைச் சிதைக்கும் ஒரு மதிப்பீட்டு முறையைத்தான் எனப் புரிந்துகொள்ள முடிகிறது. அப்படியென்றால் இலக்கியத்திற்கான விமர்சனம் எது? மதிப்பீட்டின் நேர்மையை எப்படி அடையாளம் காண்பது?

ஆகையால் அந்த எல்லா வகையான சிக்கல்களை நன்குணர்ந்த பிறகே சமீபத்தில் றியாஸ் குரானாவின் கவிதைகளை மொத்தமாக வாசிக்க முற்பட்டேன். கவிதை ஒழுங்கமைதியுடன் இருத்தல் அவசியம் எனப் பேசப்படும் ஒரு காலக்கட்டத்தில் மீண்டும் மீண்டும் கவிதையின் மீது வரையறைகளும் கட்டுப்பாடுகளும் பிரக்ஞைக்கு உட்பட்டும் பிரக்ஞைக்கு அப்பாற்பட்டும் திணிக்கப்பட்டும் நுழைக்கப்பட்டும் வருவதைக் கவனிக்க முடிகிறது. ஒழுங்குகளைப் பற்றி கவனப்படுத்தாமல் தன் கவிதைக்குள் ஒரு மாற்றுவெளியை அவர் நிறுவ முயல்கிறார் எனத் தோன்றுகிறது. கவிதை என்பதை ஒவ்வொரு காலக்கட்டத்திலும், வடிவ ரீதியிலும், கருத்தாக்க ரீதியிலும், பேசுப்பொருள் ரீதியிலும், சிந்தனை/புத்தாக்கச் சிந்தனை ரீதியிலும், அரசியல் ரீதியிலும் மதிப்பிட்டு வகைப்படுத்தி வரும் ஒரே வேலையைத்தான் விமர்சகர்கள் செய்து வருகிறார்கள். விமர்சகர்களுக்கு ரியாஸ் கவிதை மாதிரியான ஒன்றில் வேலை இல்லை என்றே நினைக்கிறேன். இப்பொழுதே இது விமர்சனம் அல்ல, நான் விமர்சகனும் அல்ல எனச் சொல்லிவிட்டு விடுப்பட வேண்டியிருக்கிறது.

எனக்கு வாசிக்கக் கிடைத்த அவருடைய கவிதைகளின் ஒரு வாசகனாக இனி தொடர்கிறேன். வாசிப்பைப் பற்றி குறிப்பிடும் றியாஸ், அவை பிரதியினூடாக எல்லாம் புலன்களையும் விரிவாக்கி, மொழிக்குள் கரைந்துகிடக்கும் குறிப்பீடுகளை, குறியீடுகளை உடைத்து அதன் தன்மைகளைப் புரிந்துகொள்ள பயன்படக்கூடியது. கவிதைக்குள் இருக்கும் எல்லா மொழிதலையும் குறிப்பீடுகளையும் அம்பலப்படுத்திவிட்டு கவிதையை நிர்வாணமாக்கும் அடுத்த கணமே அது செத்து வீழ்வதாக நினைக்கிறேன். அப்படியொரு கொலைகளைத்தான் றியாஸ் செய்கிறாரோ எனக்கூட தோன்றுகிறது. இது தற்காலிகமான ஒரு வாசகப் பரப்பாக இருந்து எழுதி முடித்தவுடன் களைந்து போகவும் வாய்ப்பிருக்கிறது. கவிதை அல்லது கவிதையை உணர்வது என்பது எத்தனை ஆபத்தான செயல் அல்லது விபரீதமான முயற்சி? ஆகையால் வாசக வசதிக்காக அவருடைய கவிதைகளை கீழ்க்கண்ட விதத்தில் பிரித்தறிய முற்படுகிறேன்.

1. கவிதையின் மையமற்ற பேச்சு

நான் வாசித்ததில் றியாஸ் குரானாவின் கவிதைகளில் மையம் இல்லாதது போல உணர்கிறேன். நவீன கவிதைகளில் மையம் இருப்பதில்லை. ஆனால் எந்த வகையான கவிதையாக இருந்தாலும் அதை வாசிக்க முயலும் மனம் முதலில் அதனுடைய வேரை அல்லது மையத்தை நோக்கித்தான் அலைகிறது. இதற்கு முன் தமிழில் எழுதப்பட்ட பல நவீன கவிதையை விமர்சிக்க முயன்ற பல விமர்சகர்கள் மையமே இல்லாவிட்டாலும் அதனை உருவாக்கி கவிதையை நோக்கி ஒரு கதையாடலைத் தொடக்கி வைத்திருக்கிறார்கள். இது தமிழில் விமர்சனம் சார்ந்து உருவான ஒரு மாயை. மையத்தைத் தகர்த்துவிட்டு, அதன் பிறகு அதற்குள் எந்த வடிவத்தையும், கருத்தாக்கங்களையும், வாழ்வையும், அரசியலையும் கண்டடைய முடியாது எனும் தீர்க்கமான பயிற்சிக்கும் நம்பிக்கைகளுக்கும் ஆளான விமர்சகர்கள் படைப்பைத் தங்கள் வசதிக்கு மறுபுனைவு செய்யத் துவங்கிவிட்டிருக்கக்கூடும். அந்தக் கணமே அது விமர்சனமாக இல்லாமல் ஒரு பகுத்தறிவின் செயல்பாடாக மாறிவிடுகிறது. அதன் பிறகு உருவாவதை நாம் மதிப்பீடு எனச் சொன்னாலும், அது ஒரு சார்புடைய புரிதல் மட்டுமே.

புதுக்கவிதையை விமர்சித்துப் பழகி போன ஒரு விமர்சகன் நவீன கவிதையை எதிர்க்கொள்ளும்போது, அதற்குள் பாடுபொருளையும், கருப்பொருளையும், அங்கதம், வடிவம் என வரிசையாகத் தேடிக்கொண்டிருப்பது போன்ற ஒரு அபத்தம்தான் றியாஸ் கவிதைகளில் மையத்தைத் தேடி அலைவது. அவர் கவிதையைத் தொடங்கிய மறுகணமே சட்டென அதிலிருக்கும் மையத்தை உடைப்பதாகப் படுகிறது. அவருடன் சமீபத்தில் கலந்துரையாடுகையில், “வாசகர்களை நேரடியாகத் தொடர்புப்படுத்துவது எனது கவிதையின் வேலை, அதுமட்டுமல்லாமல் நான் ஒரு கவிதை சொல்லி கவிஞனில்லை” என அறிவிப்பு செய்தார்.

‘தனது கவிதைக்குள்
என்னை அழைத்துச் செல்ல
அவன் விரும்பியிருக்க வேண்டும்
சொற்களைத் திறந்தபோது
எதையுமே காணவில்லை.
பலமுறை இப்படித்தான் நிகழ்ந்துள்ளது
என்னைக் கூட்டிச்
செல்லும்போது மட்டும்
கவிதைக்குள் எல்லாமே
அழிந்துவிடுவதாகச் சொன்னான்’

றியாஸ் தொடர்ந்து கவிதையின் மையத்தை இப்படி வெளிப்படையான பேச்சின் மூலம் அழிக்க முற்படுவதன் சாயலே மேற்கண்ட அவருடைய வரிகள். அநேகமாக அவர் கவிதையில் நிகழும் மரபார்ந்த கொலைகளைச் சுட்டிக் காட்டும் ஒரு வெளிப்படையான பேச்சுக்குத்தான் இப்படிக் கவிதைகளைத் தயார் செய்கிறாரோ எனக்கூட தோன்றுகிறது. மரபார்ந்த முறையில் கவிதையைத் தெய்வீகமானதாகக் காட்ட முயலும் தமிழ் சூழலின் வேடிக்கையான மனநிலையைக் கேலி செய்கிறது றியாஸ் அவர்களின் கவிதை மாதிரிகள். அவை முழுக்க சமக்காலத்திய மனசாட்சிக்கு உட்பட்டவை என்பதைத் தொடர்ந்து நிறுபனம் செய்வதற்காகவே அவர் கவிதைக்குள் கவிதை பற்றிய உரையாடலைத் தொடக்கி வைக்கிறார். அதன் மீது தொடர்ந்து கட்டியெழுப்பப்படும் புனிதங்களை உடைத்து கவிதையை எல்லோருக்குமானதாக ஆக்குகிறார்.

கவிதை இறுக்கமானவை. அவை மௌனம் நிரம்பியவை. அவற்றை அத்துணை எளிதில் புரிந்துகொள்ள முடியாது. அவை தமிழின் பல்லாண்டு மரபுடையவை எனத் தொடர்ந்து கவிதை அடைந்து வரும் தூரத்தை நேரடியாக உடைக்க எல்லாம் வகையிலுமான எத்தனங்களை அவர் செய்திருக்கிறார். கவிதையின் வடிவத்தை எல்லையற்ற வகையில் விரித்துக் காட்டுகிறார். காலம் காலமாகப் பாவிக்கப்பட்டு வந்த கவிதையின் மீதான இறுக்கங்களை மீறுவதற்கு ஒரே வழி அதற்கு முரணான எல்லாம்வகையான கலைத்தலையும் செய்வதே ஆகும்.

2. சொற்களைத் திறப்பது – Engineering The Words

ஒரு சொல்லின் வரலாறு என்ன? தமிழில் இன்று உபயோகிக்கப்படும் சொற்களின் வயது என்ன? அது நெடுங்காலம் பயணம் செய்து வந்திருக்கிறது. அப்படிப்பட்ட சொல்லுக்குள் படிந்திருப்பது ஒரே மாதிரியான குறிப்பீட்டு முறையாகவோ அல்லது ஒரு அடுக்குகளோ எனத் தோன்றவில்லை. ஒரு சொல் தனக்குள் வைத்திருக்கும் ஆழங்கள் பலநெடுங்காலத்தில் பலரால் உருவாக்கப்பட்டவை. ஆனால் ஒரு சொல் 10 வருடத்திற்கு முன் பாவிக்கப்பட்ட மாதிரியே அதன் கட்டுக்குலையாமல் பாதுகாக்கப்பட்டு இன்றும் பாவிக்கப்படுவதைவிட ஒரு கொடூரம் இல்லையென்றே நினைக்கிறேன். இதைப் பிரக்ஞையற்று பலரும் செய்து வருவதை றியாஸ் தன் கவிதைகளில் நேரடியாகவே சாடுகிறார். கவிதையை கவிதைக்கு எதிராகப் புனைந்து காட்டி அதற்குள் இருக்கும் சொற்களைக் கவிதைக்கு வெளியே மிதக்கவிடுவதே புதிய முயற்சியாகக் கருதுகிறேன். அப்படியொரு முயற்சியின் வழியே அவரின் கவிதைகள் நமக்கு வந்து சேர்கின்றன.

‘சொற்களைப் பூட்டிய அவன்
சாவியைத் தராமலே போய்விட்டான்.
ஆத்திரத்தில் சொற்களை உடைத்தேன்.
உள்ளே கவிதைகள் மாத்திரம்தான் இருந்தன.
பொய்யென்றால் சொற்களை உடைத்துப் பாருங்கள்’

சொற்களைப் பூட்டுவது என்ற ஒரு வன்முறை எங்கும் நிகழ்த்தப்பட்டு வந்திருப்பதை மீட்டுணரச் செய்யும் கூர்மையான வரிகளை ரியாஸ் தமிழ் சூழலுக்குக் கொடுத்துள்ளார். கவிதை படைத்தவன் கவிதைக்குள் இருக்கும் சொற்களைப் பூட்டுவது என்பது இரண்டு வகைகளில் புரிந்துகொள்ளலாம். இது ஒரு கவித்துவமான வரி, அழகியல் நிரம்பியவை என சிலாகித்துவிட்டு நகரக்கூடிய தன்மை உடையவை அல்ல. சொற்களைப் பூட்டுவது என்பது தான் எழுதிய கவிதையின் ஒவ்வொரு சொல்லும் அதனுடைய பாங்கை மிக நேர்த்தியாகச் செய்வதற்குப் படைத்தவன் விதிக்கும் தண்டனைத்தான் அது. அதனுடைய பொருளைவிட்டு அது நகராதபடிக்குக் காலம் முழுக்க எப்பொழுது வாசித்தாலும் அதே பொருளைச் சுமந்து நிற்கும் மிகக் கொடூரமான தண்டனை. இதை ஒரு வகையில் கவிதையைச் சொற்களைக் கொண்டு நெய்வது எனக்கூட சொல்லலாம். நூலை இறுக்குவதன் மூலம் ஒரு வடிவம் கிடைக்கிறது. சொற்களை இணைத்து கோர்த்து அதை இறுக்கமாக்குவதன் மூலம் கவிதை கிடைக்கிறது எனப் பலர் செய்யும் வன்முறையை, ரியாஸ் தன் கவிதையில் அம்பலப்படுத்துகிறார்.

‘சொற்களுக்குள் நெடுநேரம்
கவிதையை அடைத்து வைக்க
முடியாது’ என்றேன்.

நாம் உருவாக்க நினைக்கும் கவிதையை அல்லது கருத்தை படைப்பதற்குச் சொற்களைப் பலியாக்கும் முறையை மிகக் கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும். சொல் தேர்வு என்பதை மிகவும் பிரக்ஞையுடன் செய்பவர்கள் தனது கவிதைக்குள் அவற்றை கருத்தறிந்து புகுத்துகிறார்கள். சொற்கள் தனக்களிப்பட்ட இடத்தில் போய் அமர்ந்துகொள்கின்றன. அதன் பிறகு அந்தச் சொற்கள் அங்கேயே தேங்கிவிடுகின்றன. சொல்லப்போனால் அவை அப்பொழுதே அங்கு வைத்து புதைக்கப்படுகின்றன. அதன் பிறகு அவை இடம் மாறுவதும் அல்ல, தன்னைப் புரட்டிக் கொள்வதும் அல்ல, உருமாற்றிக்கொள்வதும் அல்ல. சொற்களைக் கவிதைக்குள் இத்தனை வறட்சி மிகுந்த நிலைமையில் உபயோகிக்க கவிஞர்களுக்கு என்ன நேர்ந்தது?

கவிதையையும் சொற்களையும் கொல்கிறவர்களைக் கொல்லும் வேலையைத்தான் றியாஸ் குரானாவின் கவிதைகள் செய்வதாக நினைக்கிறேன். அதனால்தான் தன்னை இலக்கியத்தைக் கொல்பவனின் சாட்சியம் என அடையாளப்படுத்திக்கொள்கிறாரா?

‘பெரும்பாலும்
அந்தப் பறவை எதுவென்று
நீங்கள் ஊகித்திருப்பீர்கள்
இல்லையெனில் இனியும் ஊகிப்பதற்கான
அவகாசம் உங்களுக்கில்லை
வாசிப்பதை நிறுத்திவிட்டு
தயவு செய்து போய்விடுங்கள்

இது, ஓய்வெடுப்பதற்காக அந்தப் பறவை
கவிதைக்குள் வருகின்ற நேரம்’- றியாஸ்

ஒரு சொல்லைத் தொடும்போது நம் உடல் சிலிர்க்கக்கூடும். அல்லது மனம் அதிரக்கூடும். எத்துணைப் பழமையானவையாக இருந்தாலும் அது வந்து சேர்ந்திருக்கின்ற இந்த நூற்றாண்டின் எல்லாம் பொலிவுகளையும் துடிப்பையும் தனக்குள் சேமித்துக்கொள்கின்றன. இது எத்தனை கவிஞர்களுக்கு தெரியும்? தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. “யாரும் கவிதையைப் பெற்றெடுப்பதில்லை” என அவரே சொல்கிறார். பிரக்ஞையும் கவிதையைச் செய்பவர்கள்கூட சொற்களுக்கு அளிக்கும் வரம் ஒரு கூண்டுக்குள் அடைத்து வைக்க முயல்வதே ஆகும். கவிதைக்கு வெளியே எப்படிச் சொற்கள் மிகச் சுதந்திரமாகப் பயணிக்கக்கூடியதோ அதற்கு மாற்றாகப் பலரின் நெடுங்கவிதைகளுக்குள் சொற்கள் பிடித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

றியாஸ் தனது கவிதைகளுக்குள் சொற்களை அடைத்து வைக்கவும் இல்லை, அல்லது தான் பயன்படுத்திய சொற்களுக்குள் கவிதையையும் ஒளித்து வைக்கவில்லை. இவையனைத்தையும் மீறி சொற்களுக்காகக் கவிதையோ அல்லது கவிதைக்காகச் சொற்களையோ அவர் தேர்ந்தெடுக்கவும் இல்லை என்றே தோன்றுகிறது. மலை மீது தங்கிச் செல்லும் பனி போல சொற்கள் சட்டென கரைந்துவிடுகின்றன அல்லது திடீரென கவிதை காணாமல் போய்விடுகிறது. இதுதான் றியாஸ் குரானாவின் கவிதையை வாசிக்கும் வாசகன் அடையும் எல்லை, விரக்தி அல்லது புரிதல். கவிதைக்கு வெளியில் சொற்களை அனுப்பிவிடுவதும் சொற்களுக்குள் வைத்த கவிதையை உடனே அவிழ்த்துவிடுவதும் அவருக்குக் கைவந்திருக்கிறது. ஒருவேளை இப்படிப் பேசுவதே அல்லது ஒரு கவிதையை இப்படிப் புரிந்து கொள்வதே விநோதமாக இருக்கக்கூடும். இது றியாஸ் குரானாவின் கவிதையைப் புரிந்துகொள்ள நான் உருவாக்கிய மதிப்பீட்டு அரசியல். இதனைக் கடந்தும் நீங்கள் அவருடைய கவிதையை அடையலாம். வெளியே தூக்கியெறியப்பட்டால் நான் பொறுப்பல்ல.


றியாஸ் குரானா குறித்த எளிய அறிமுகம்

தொடக்ககாலக்கட்டத்தில் இலங்கையில் உருவான முதலாளி – பாட்டாளி எனும் இலக்கிய செயற்பாடுகளுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றத்தின் வழி ‘தமிழ் தேசியம்’ எனும் கட்டமைப்பு போர் காரணமாக அங்கு உருவானது. இந்த மாற்றத்தின்போது பெரும்பான்மையான முஸ்லிம் இலக்கியவாதிகளின் பங்களிப்புகளும் தமிழ் இலக்கியத்துக்கான செயல்பாடுகளும் கவனிக்கப்படாமல் போனது. அவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார்கள். ஆகையால் தமிழ் தேசிய உருவாக்கத்தில் ஒரு கவிஞனாக தனது நிலைப்பாட்டையும் படைப்பையும் நிருபீக்க தொடர்ந்து பலர் போராட வேண்டிய சூழல் அங்கு இருந்ததையும் வெளிப்படுத்தியுள்ளார். தனது பின்நவீன எழுத்தின் மூலம் அவர்கள் ஒடுக்கப்பட்டதன் அரசியலை மீட்டுணர்ந்து எழுதியதில் றியாஸ் குரானாவிற்கு முக்கியமான பங்குண்டு. முஸ்லிம் இலக்கியவாதிகளின் மீது நடந்தேறிய ஒதுக்கப்படல் எனும் செய்ல்பாட்டின் மீது எதிர்ப்பேச்சை மிகவும் துல்லியமாகத் தொடக்கி வைத்துள்ளார் றியாஸ்.

‘மாற்றுப்பிரதி’ (http://maatrupirathi.blogspot.com/) எனும் வலைத்தலத்தில் எழுதி வரும் றியாஸ் மிக விரைவில் தனது கவிதை தொகுப்பைக் கொண்டு வரவுள்ளார். எழுத்துச் சூழலில் எப்பொழுதும் தொடர் விவாதப் பேச்சு இருந்தாக வேண்டும் என இலங்கை இலக்கிய சூழல், அதிலுள்ள முஸ்லிம்களின் பங்களிப்பு என தனது உரையாடலைத் தீவிரமாகத் தொடர்ந்து பதித்து வருகிறார். பின்நவீனம் குறித்த எழுச்சியை அதற்குள்ளிருக்கும் மாற்றுத்தளங்களை எழுத்துச் சூழலில் அறிமுகப்படுத்த பற்பல உரையாடல்களையும் கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768