|  | 
		 கூத்துப்பட்டறையில் மறு நாள் காலையில் உடல்பயிற்சி செய்யச் சென்றபோது தான் 
		ஓருண்மை புலப்பட்டது. ஆங்குள்ள மாணவர்கள் அசாத்திய வேகத்தில் உடல் பயிற்சி 
		செய்யும் ஆற்றல் மிகு பிள்ளைகள், இவளோ, களரியின் அரிச்சுவடியே இங்கு 
		வந்துதான் அறிகிறாள். என்னவோ உற்சாகத்தில், உடற்பயிற்சிக்கூடத்தில் 
		நுழைந்து விட்டாளே தவிர, களறி செய்யவே வரவில்லை. ஹா, ஹூ, என மூச்சுப் போய் 
		போய் வந்தது. மூச்சுப்பயிற்சி மட்டும் தான் ஒழுங்காக செய்ய முடிந்தது. 
		நுனிக்காலில் நிற்பது, முட்டியால் சுழற்றல், ஒற்றைக்காலில் தவம் செய்தல் என 
		எதுவுமே சில நிமிஷங்கள் தான் தாக்குப்பிடிக்க முடிந்தது. 
 இடுப்பை கொஞ்சம் கூட அசைக்காமல், வில்லாய் [மாபாரமாய்] வளைந்து, சட்டென 
		காலை மடித்து, படீரென்று எழுந்து, இவளுக்குப் பொத்துக்கொண்டு வந்தது அழுகை. 
		தலையைச் சுற்றி சுற்றி வந்தது. இது என்ன கருமம்டா சாமி எனக்கோபம் கூட 
		வந்தது. ஆசிரியர் முன்னால் இயலாமையைக்காட்ட வெட்கம் வேறு. பின் என்ன? முதல் 
		நாள் தான், நடிகர்களுக்கு மட்டுமல்ல. ஒரு டைரக்டருக்கும், உடல்பயிற்சி 
		அவசியம் தெரிந்திருத்தல் அவசியம். அப்பொழுதுதான் நாடகக்கூறுகள் பிடிபடும் 
		என்று ஆசிரியர் கூற, சத்யமாயிட்டும் என்று இவளும் ஆமாம் சாமி 
		போட்டவளாயிற்றே. எந்த முகத்தை வைத்து, எனக்கு தலை சுற்றுகிறது? என்று 
		சொல்ல. இவளுக்குப் பிடிக்கவில்லை. எதுவுமே பிடிக்கவில்லை. மொழியாடல் ஒரு 
		பெரும் பிரச்சினையாக இருந்தது. ரவிவர்மா முனைவர் பட்டத்துக்கு படிக்கும் 
		மாணவர், குமரவேல் முதுநிலை பட்டதாரி, பசுபதி சகலகலா வல்லவன், கலைராணி 
		நாசரோடு நடிப்புப்பள்ளியில் பயிற்சி பெற்றவர். சந்திரா, ஜோர்ஜ், குமார், 
		வினாயகம், முருகன், பழனி, காசித்தம்பிரான் [கண்ணப்ப தம்பிரானின் மகன்] என, 
		இன்னும் [மற்றவர்கள் பலரின் பெயர்கள் நினைவிலில்லை] பலரும் அங்கு அதி 
		ஆற்றல் மிகு மாணவர்களாக இருந்தனர். எழுத்தில் மட்டும்தான் இவளால் சாகசம் 
		செய்ய முடிந்ததே தவிர, தேவராட்டம், கோடியாட்டம், என எதுவுமே தெரியவில்லை.
 
 
  தேவராட்டம் கலையில் பசுபதி அதி ஆற்றல் மிகுந்தவன். டப்பாங்குத்து என்ற பதமே 
		பசுபதி ஆடிக்காட்டியபோதுதான் தெரிந்தது. நாடக வகுப்பில் கற்பூரமாய் 
		க்ரஹிக்கும் ஆற்றல் பயிற்சிக்கூடத்தில் எடுபடவில்லை. மாணவர்கள் எங்கே 
		சிரித்துவிடுவார்களோ என்ற பயத்தில் வேக வேகமாய், பயிற்சி செய்ய முயன்று, 
		மிகவும் களைத்துப்போனாள். மிகவும் கஷ்டமாக இருந்தது. மதிய உணவுக்கு 
		அறைக்குள் களைத்துப்போய் நுழைந்தவள் சாப்பிடக்கூட இல்லை. அப்படியே 
		படுத்துவிட்டாள். அடுத்த நிமிஷம் கதவு தட்டும் ஒலி. வந்த எரிச்சல் கொஞ்ச 
		நஞ்சமல்ல. சே, எனக்கோபத்தோடு கதவைத்திறந்தால், என்ன ஆனந்த அதிர்ச்சி, Prof. 
		ராமானுஜம் சார். இவளது மதிப்பிற்குரிய, வணக்கத்திற்குரிய ஆசிரியர், 
		ராமானுஜம் சார். சிங்கை வந்தபோது கண்டதைவிட இன்னும் வயதாகியிருந்தார். 
		தக்ஷணமே அவரை நமஸ்கரித்து எழுந்தவுடன் ராமானுஜம் சார் "இங்கே எப்படி 
		எல்லாம் செளகரியமாக இருக்கிறதா?" என்று மலையாளத்தில் கேட்க, 
		கட்டுப்பாட்டையும் மீறி, கண்கள் நிரம்பிவிட்டது. 
 சார், இவர்களில் சிலர் பேசும் தமிழ் புரியவே இல்லை, ஞான் தமிழ் பேசினாலும் 
		கேலி போல் பார்க்கிறார்கள் என்றிட, ராமானுஜம் சார் தேற்றினார். "சென்னையில் 
		பெரும்பான்மை இடங்களில் இப்படித்தான் தமிழ் பேசப்படுகிறது. கமலம் பேசுவது 
		புத்தகத் தமிழ். பாதகமில்லை. அப்படியே பேசுங்கள் என்றிட, முத்துசாமி சார் 
		உதவிக்கு வந்தார். "கமலாதேவி, மாணவர்களிடம் ஞான் பேசுகிறேன். கவலை வேண்டா, 
		நல்லத் தமிழைக்கேட்டு ரொம்ப காலமாகிவிட்டது. உங்கள் தமிழை நாங்கள் 
		ரசிக்கிறோம் என்றிட ஸ்வாஸம் மீண்டு வந்தது. அடுத்த ஒரு மணிநேரத்தில் 
		வகுப்பு தொடங்கி விட்டது. அன்றைய வகுப்பை ராமானுஜம் சார் நடத்தினார். 
		மகிழ்ந்துபோய் இவள் பார்வையை இவள் விளக்கத்துடன் நிகழ்த்திட, ராமானுஜம் 
		சார் மனமுவந்து பாராட்ட, அப்படியே ஜிவ்வென்று ஆகாயத்தில் பறப்பதுபோல் இவள் 
		மிதந்தாள். குமரவேல், சந்திரா, கலைராணி, என எல்லோருமே கேள்விகள் கேட்க, 
		அன்றைய வகுப்பு இனிதே முடிந்தது. அப்பொழுதுதான் இவள் கவனித்தாள். பசுபதி 
		ஆசிரியர்களுக்குப் பின்னால், சற்று தூரத்தில், எங்கோ பார்த்தபடி, 
		விச்ராந்தியாய் அமர்ந்திருப்பதை. வகுப்பில் கலந்து கொள்ளவே இல்லை. 
		ஒருவார்த்தை ராமானுஜம் சாரிடம் பேசவில்லை. பிறகு ஒரு வாரம் ராமானுஜம் சார் 
		இவளுக்கு வகுப்பு நடத்தும்போதும் இதே நிலைதான். பசுபதியின் வாயில் 
		முத்துக்கொட்டி வைத்திருந்தான் போலும். முத்து உதிர்ந்துவிடாமல் 
		மெளனமாக்கும். அடுத்த வாரம் ராமானுஜம் சார் புறப்பட்டுப்போய்விட, மறுநாளே 
		டெல்லியிலிருந்து Dr. ரவீந்திரன் வர, கச்சேரி களை கட்டியது. பசுபதியை 
		கையில் பிடிக்க முடியவில்லை.
 
 
  "சார், இவர்தான் எங்கள் சேச்சி, எங்கே இவரோடு தமிழ் பேசி சமாளியுங்கள் 
		பார்ப்போம்," என்று பசுபதி உசுப்பிவிட, ரவீந்திரன் சார் சிரித்தார். இவள் 
		வாயே திறக்கவில்லை. தொலைபேசியில் ஒருமுறை என்னிடம் பேசியிருக்கிறீர்களே? 
		நினைவில்லையா என்று கேட்க, மூச், ஊஹூம் இவள் பேசவேயில்லை. இவள் வந்து 
		சேர்ந்த முதல் நாள், இவளது தமிழைக்கேட்டு கேலியாய் பார்த்த மாணவர்கள், 
		இப்பொழுதெல்லாம் இவள் தலையைக்கண்டாலே, சேச்சி, இங்கே அமருங்கள், காலயாகாரம் 
		சுவையாக இருந்ததா? என்று கேட்கும் அளவுக்கு முன்னேறிவிட்டார்கள். இதுவன்றோ 
		தமிழ், இப்படியன்றோ தமிழ் பேசவேண்டும் என்றிவள் சிலாகிக்க, முத்துசாமி சார் 
		கடகடவென்று சிரித்தார். பசுபதியோ இன்னும் ஒரு பங்கு மேலே போய், சேச்சி, 
		இன்னும் எத்தனை நாட்களுக்கு இவர்களுக்கு இந்த தண்டனை? என்று சோகமாய்க் 
		கேட்க, ரவீந்திரன் சார் புன்னகையோடு, கமலாதேவி இங்கிருந்து போனாலும், இங்கே 
		எல்லோரும் இப்படித்தான் தமிழ் பேசவேண்டும் என்றிட, முருகனும் ஜோர்ஜும், 
		ஆவென்று மயங்கி விழுவதுபோல் ஒருவினாடி நடிக்க, இவள் ரசித்துச் சிரிக்க... 
 -தொடரும்
 |  |