|  | 
 | கே. பாலமுருகனின் ‘காட்சிகளின் இரண்டு வகையான 
		சத்தங்கள்’ 
		 வித்தியாசமான கதையமைப்புடனும் மர்மம் நிறைந்த கதைத்தளத்துடனும் கே. 
		பாலமுருகனின் ‘காட்சிகளின் இரண்டு வகையான சத்தங்கள்’ உருவாக்கம் 
		பெற்றிருந்தது. நான்கு கேமராக்கள் இக்கதையில் முக்கிய கதாப்பாத்திரங்களாய் 
		இயங்கி இக்கதையை நகர்த்திச் செல்கின்றன. மனிதர்கள் அல்லாத பிற உயிரினங்கள் 
		கதைக்குள் நுழைய எப்போதும் எவ்வித தடையும் இருப்பதில்லை. அதே சமயம் 
		அஃறிணைகளும் ஒலி மற்றும் ஒளி தன்மைகளுடன் இணைந்து கதைத்தளத்தில் சிறப்பாக 
		விளையாட முடியும் என்பதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக இக்கதை.
 ‘பனி மூட்டம் அடர்ந்திருந்த கேமரன்மலைப் பிரதேசத்தில் காரணமே இல்லாமல் 
		ஒருவன் தூங்கி வழிவது மிகவும் நிதர்சனம். அதுவும் கைத்தொலைபேசியிலிருந்து 
		வரும் தொல்லைகளை நிராகரிக்க அதனை முடக்கிவிட்டு அரைமயக்கத்தில் தொலைவது 
		மேலும்வசதி.’ கதையின் தொடக்கத்தில் வரும் இவ்வரிகள் மாயை நிறைந்த உலகத்தை 
		நினைவுப்படுத்துகின்றது. மாயையினுள் சிக்குண்டும் இழுக்கப்பட்டும் 
		மனிதர்கள் உலக நியதியைப் புறந்தள்ளிவிட்டு மயக்கத்தில்தான் இருக்கின்றனர்.
 
 ஒரு வீட்டின் நான்கு வெவ்வேறான இடங்களில் இயங்கும் கேமராக்கள் சுவாராஸ்யமாக 
		நமக்குக் கதையைத் தெளிவாக்கி சொல்கின்றன. கேமராக்களின் வழி ஒலியும் ஒளியும் 
		தங்களின் சொற்களற்ற மொழி ஆளுமையை உணர்த்துகின்றன. இம்மொழியை உணரவும் 
		ரசிக்கவும் நம்மைச் சுற்றிய சூழல் நிசப்தத்தில் ஆழ்ந்துவிடுகின்றது. 2010 
		ஆண்டில் ஒரு குறிப்பிட்ட நாளில் அதிகாலை மணி 1.45 முதல் அதிகாலை மணி 2.55 
		வரை நடந்த மர்மங்களைக் கோர்வையாக்கிக் காட்டுகின்றன கேமராக்கள். 
		மர்மங்களின் முடிச்சுகளையும் அதே கேமராக்களே 2006ம் ஆண்டில் நடந்த மற்றொரு 
		சம்பவத்தையும் நம்மீது படர செய்து களைகின்றன. இவ்விரு சம்பவங்களிலும் 
		பதிவாகியுள்ள காட்சிகளைக் கூர்ந்து நோக்கினால் மட்டுமே உள்ளார்ந்த 
		அர்த்தத்தோடு புதையுண்டு சிதறி உதிர்ந்திருக்கும் கதைத்துண்டுகளை 
		வெளிக்கொணர இயலும். அதன் பின்னர் மனம் அதை சரியாக ஒட்டி முழுமையான 
		கதைத்திரையைக் கண்களின் முன் எவ்வித சிரமுமின்றி ஒளிப்பரப்பாகிவிடும்.
 
 நம் அடர்ந்த வாழ்க்கைப்பகுதிகளும் சில தருணங்களில் நம்மை அறிந்தும் சில 
		தருணங்களில் நம்மை அறியாமலும் சிதறி அமிழ்ந்துவிடுகின்றன. அதன் ஒவ்வொரு 
		சிறு பகுதியும் மிகச்சிறந்த உன்னகத்தன்மையுடையவையாக நாம் மீண்டும் 
		கண்டடையும் தருணங்களே உணரச் செய்கின்றன. அச்சிறு பகுதிகள்தான் வாழ்க்கை 
		சுவையைத் தனி தனி பிரிவுகளாய் தன் வசம் வைத்திருக்கின்றன. ஒவ்வொரு 
		பகுதியிலும் மற்றவற்றில் காணாத வித்தியாசமான தனிச்சுவை. தொலைத்த 
		வாழ்க்கைப்பகுதிகளைக் கண்டடையும் கணங்களில் உடனிருக்கும் பிற பகுதிகளை 
		நழுவவிடுவதும் மனித இயல்பாகிவிட்டது. சிதறிய எல்லா பகுதிகளும் ஒன்றாக 
		இணைந்து நம் இரு கைகளிலும் நிறைவு பெற்ற வாழ்க்கைப்புதிர் காவியமாய் 
		புரளும்போது உன்னத பரவசம் உடல் முழுவதும் திரண்டு அளவற்ற பேரின்பம் கலந்த 
		ஆத்ம திருப்தியைப் பரவ செய்யும்.
 
 கேமராவில் பதிவான 2010ம் ஆண்டு நடந்த சம்பவங்களை முதலில் கண்டு மனம் 
		கலங்கினாலும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பான மற்றொரு சம்பவம் கண்முன் 
		விரியும்போது கலங்கிய கண்கள் மறைந்திருக்கும் மர்மத்தை அறிந்து கொள்கின்றன. 
		புதிர் மிகுந்த வாழ்க்கையின் சில கூரான விளிம்புகள் கீறி மனதைக் கலங்க 
		செய்யும் பொழுதுகளில் திரும்பி பார்க்க எத்தனித்தால் நம் நிழல் மட்டுமே 
		கண்களில் தெளிவின்றி தென்படும்.
 
 கதையில் நான்கு வெவ்வேறான இடங்களில் நான்கு கேமராக்கள், மனித வாழ்க்கையிலோ 
		எங்கும் என்றும் சூழ்ந்திருக்கும் ஐந்து கேமராக்கள். பஞ்சபூதங்கள் எனும் 
		ஐந்து கேமராக்கள் மனிதர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் துல்லியமாக ஒவ்வொரு 
		மணித்துளியும் பதிவு செய்கின்றன. பஞ்சபூதங்களும் நம் வாழ்க்கையில் ஒன்றற 
		கலந்துவிட்டதாலோ என்னவோ பஞ்சபூதங்களின் பிடியில் நாமிருக்கிறோம் என்பதே 
		மனிதர்களில் பலர் மறந்துவிட்டனர். மறத்தலும் மறைத்தலும் நடைமுறை மனித 
		குணமாகிவிட்ட போதிலும் பஞ்சபூதங்களுக்கு இக்குணங்களில்லை. இயற்கையே 
		பஞ்சபூதங்களின் அடித்தளமாகவும் ஆணிவேறாகவும் விளங்குவதால் இவற்றை அழிக்கும் 
		சக்தி மனிதனுக்குக் கிடையாததால் மனித மேதாவித்தனம் இவற்றின் முன் உடைந்து 
		போகின்றது.
 
 பஞ்சபூதங்கள் எனும் பெயரில் நித்தமும் அயராது செயலாற்றும் நீர், நெருப்பு, 
		காற்று, ஆகாயம், பூமி யாவுமே காலத்தின் கையில் தன் இயல்பை விட்டுக் 
		கொடுக்காமல் தங்களின் மாசற்ற அடையாளத்தை என்றுமே தக்க வைத்துக் கொள்கின்றன. 
		அமைதியான பஞ்சபூதங்களின் செயல்பாடுகள் என்றுமே பிரமிக்க வைப்பவை. அதன் 
		கோபம் எரிமலையாய் வெடித்து சிதறும்போதும் தாங்கிய நிலம் அதிரும்போதும் 
		மழைக்கோடுகளாய் விழுந்து வெள்ளோட்டமாய் ஓடும்போதும் மனித மனங்கள் பதறி 
		தவிக்கின்றன. இவற்றை பஞ்சபூதங்களின் தண்டனை அல்லது பழி வாங்குதல் என 
		குறிப்பிட்ட முடியாது. இவையாவும் முற்றிலும் மனித செயல்களின் 
		எதிர்வினையாகவே வெளிப்படுகின்றன. நியூட்டனின் நிருபிக்கப்பட்ட அறிவியல் 
		கூற்று ‘ ஒவ்வொரு செயலுக்கும் எதிர்ச்செயல் உண்டு’. இக்கூற்று எப்போதும் 
		எங்கும் உயிர்த்தப்படிதான் இருக்கின்றது. நம் ஒவ்வொரு செயலும் இயற்கையால் 
		பதிவாக்கப்படுகின்றது.
 
 இயற்கையின் மொழியையும் உன்னதத்தையும் நமக்குக் கற்பித்து 
		முற்றுப்பெறுகின்றது கதை.
 
 இக்கதை பாதையில் இயற்கை பதித்த கால் தடங்கள் நம் வாழ்க்கைப்பாதையிலும் 
		என்றோ தொடங்கப்பட்டு என்றுமே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
 |  |