|  | 
 | ‘ஹெகலின் பிரச்சனை என்னவென்றால், அவர் தான் ஒரு தனி மனிதன் என்பதையே 
		மறந்துவிட்டார் என்பதுதான். வரலாறு, மனித சமூகம் என்று பேசும் அவர் தானும் 
		வரலாற்றில் இடம் பெற்றுள்ள ஒரு தனி நபர் என்பதை கவனிக்கத்தவறுகிறார்.’ 
		என்று கிண்டல் செய்த டென்மார்க் நாட்டு தத்துவமேதையான சோரன் கீர்க்கேகார்ட் 
		உண்மை என்பது தனிப்பட்ட விஷயம் என்கிறார். எனக்கு எது உண்மை என்று படுகிறதோ 
		அதுவே என் உண்மை; உனக்கு எது உண்மை என்று படுகிறதோ அது உனது உண்மை’ என்று 
		கூறும் அவர் உண்மையை நம்பிக்கை சார்ந்தது என்றும் கூறுகிறார். இயேசு 
		கிறிஸ்து இருப்பது உண்மை என்று நம்பினால் அந்த நம்பிக்கையே அவரது 
		இருத்தலுக்கான உண்மை என்பது அவர் அனுமானம். 
 அதே போல், மயிர் பிளக்கும் தத்துவ விவாதங்களில் எல்லாம் அவருக்கு நம்பிக்கை 
		இருந்ததில்லை. ‘நான் ஓர் ஆற்றில் விழுந்து விட்டால், அந்த ஆற்றில் நான் 
		விழுந்தது சுவாரஸ்யமாக இருக்கிறதா, இல்லையா; அந்த ஆறு எங்கிருந்து 
		வருகிறது? எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பது போன்ற விசாரணைகளில் இறங்க 
		மாட்டேன். அதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்பது பற்றி மட்டுமே 
		யோசிப்பேன். இதுதான் இருத்தல் பற்றிய பிரச்சனை. இதுவே உண்மையான பிரச்சனை’ 
		என்றார் கீர்க்கேகார்ட்.
 
 இதே போன்ற ஒரு கருத்தை புத்தரும் கூறி இருக்கிறார். ‘ஒரு மனிதனின் மீது 
		அம்பு பாய்ந்து விட்டது என்றால், அந்த மனிதன் தன் மேல் பாய்ந்த அந்த அம்பு 
		எதனால் செய்யப்பட்டது; எப்படிப்பட்டது; யாரால் ஏவப்பட்டது என்றெல்லாம் 
		ஆராய்ந்து கொண்டிருக்க மாட்டான். அந்த அம்பிலிருந்து எப்படித் தப்பித்து 
		உயிர் பிழைப்பது என்று மட்டுமே பார்ப்பான்’ என்பது அவர் கருத்து.
 
 கீர்க்கேகார்ட்தான் முதன் முதலாகத் தனிநபர் (single individual) மீதான 
		கவனத்தை முன் வைத்தவர் எனலாம். அவருக்கு முந்தைய தத்துவவாதிகள் எல்லோரும், 
		உலகம், மனிதகுலம், சமூகம் என்றே விரிந்த தளத்தில் பேசிக்கொண்டிருந்தனர். 
		கீர்க்கேகார்ட்தான் எல்லாவற்றையும் விட தனிமனிதன் முக்கியம் என்றார். தனது 
		நூலையே ‘தனிநபருக்கு’ என்று சமர்ப்பணம் செய்தார்.
 
 கீர்க்கேகார்ட் தத்துவ தளத்தில், ‘இருத்தலியல்’, ‘அவநம்பிக்கை’, ‘பதற்றம்’ 
		போன்ற சொல்லாடல்களை உருவாக்கினார். இவற்றையே பின்னாளில் வந்த மார்டின் 
		ஹைடெக்கர், ழீன் போல் சார்த்தர் போன்றோர் கையாண்டனர் என்பது 
		குறிப்பிடத்தக்கது. ஒரு மனிதன் தன் வாழ்கையை எப்படி வாழ்கிறான் என்பதையே 
		தனது ஆய்வுப் பணியாக அவர் மேற்கொண்டார். இதுவே உண்மையை அறியும் வழி என்று 
		கண்டார். அவர் மனித வாழ்வை மூன்று நிலைகளாகப் பிரிக்கிறார். ஒன்று: அழகியல் 
		நிலை; இரண்டு: அறவியல் நிலை; மூன்று: மதவியல் நிலை. அழகியல் நிலையில் 
		வாழும் மனிதன் வாழ்வில் இன்பம் பெறுவதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறான். 
		விருப்பம் போல் இவ்வுலக சுகங்களைத் துய்க்கிறான். அப்போது திடீர் என்று 
		அவனுக்குள் பதற்றம் தோன்றுகிறது. இந்த இன்பம் நிலைக்குமா என்ற அச்சம் 
		பிறக்கிறது. அந்த நிலவரம்தான் இருத்தலியல் நிலவரம் என்கிறார் 
		கீர்க்கேகார்ட். இப்படிப்பட்ட நிலவரம் அவனை ‘இதுவா’ ‘அதுவா’ என்று 
		அலைக்கழிக்கிறது. அவனை ஒரு தேர்வுக்குள் பிடித்துத் தள்ளுகிறது.அந்த 
		இடம்தான் மதவியல். அது மனிதனைக் கடவுளிடம் போகுமாறு தூண்டுகிறது.
 
 கீர்க்கேகார்டுக்குப் பின்னர் வந்த இன்னொரு தத்துவவாதியான மார்டின் 
		ஹைடெக்கரும் ஒரு தனிமனிதவாதியே. ‘கடந்த 2,000 ஆண்டுக்கால தத்துவ வரலாற்றில் 
		பொருள்களின் இருத்தலைப் பற்றி யாரும் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை’ 
		என்றார் அவர். ‘பொருள் இருக்கிறது என்று புரிந்து கொண்டவர்கள் அது தன்னுள் 
		என்னவாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவில்லை’ என்பது அவரது கோட்பாடு. 
		அதற்கு அடையாளமாக ஒரு குறியீட்டை அவர் கண்டு பிடித்தார். ஒவ்வொரு பொருளின் 
		பெயரையும் எழுதி அதன் மேல் பெருக்கல் குறி இட்டு, அந்தச் செய்கையை அழிப்பு 
		(destruction) என்று குறிப்பிட்டார். அதாவது வரலாறு என்று எழுதிவிட்டு, 
		அதன் மேல் பெருக்கல் குறி இடும் போது அந்த வரலாற்றின் மீதான நம்பிக்கை 
		இன்மையை அது சுட்டும். இது தெரிதாவின் தகர்ப்பு விமர்சனத்துக்கு முன்னோடி 
		எனலாம்.
 
 கீர்க்கேகார்டும், மார்டின் ஹைடெக்கரும் தங்களின் தனிநபர் வாத 
		சிந்தனைகளாலும், இருத்தலியல் கோட்பாடுகளாலும் வேறொரு மனிதரை பாதித்தனர். 
		அவர் பெயர் சார்த்தர்.
 
 நீட்ஷேயின் ’கடவுளின் மரணம்’ கோட்பாடு, கீர்க்கேகார்டின் ’பதற்றம்’ 
		கோட்பாடு, மார்டின் ஹைடெக்கரின் ’இருத்தலியம்’ கோட்பாடு ஆகியவற்றின் 
		அடிப்படையில் சார்த்தர் தனது இருத்தலியல் கோட்பாட்டைக் கட்டமைத்தார்.
 
 சார்த்தருக்கு முன்னாள் வந்த இருத்தலியல்வாதிகள் இருத்தல் என்பதை உயிருடன் 
		இருத்தல் என்று அர்த்தப் படுத்தினார்கள். சார்த்தர் இருத்தல் என்பதை 
		உயர்திணைக்கான இருத்தல் என்றும் அஃறிணைக்கான இருத்தல் என்றும் இரண்டாகப் 
		பிரித்தார். அதாவது, அஃறிணைப் பொருள்களின் இருத்தல் ‘அவற்றுக்குள்’ 
		இருக்கிறது. மனிதனின் இருத்தல் ‘அவனுக்கானதாக’ இருக்கிறது.
 
 வாழ்க்கை என்பது அபத்தமானது. வாழ்க்கையின் இந்த அபத்தம் என்னை வாந்தி 
		எடுக்கத் தூண்டுகிறது. என்று சார்த்தர் அறிவித்தார்.
 
 ‘நான் என்பது எனது பிரக்ஞை. பிரபஞ்சம் என்பது என்னைச் சுற்றி இருக்கும் 
		வெளி. இதில் மொழி என்பது எனக்கும் என்னைச் சுற்றிலும் இருக்கும் 
		பிரபஞ்சத்துக்கும் இடையே ஓர் இடையூறாக இருக்கிறது’ என்றார் சார்த்தர். 
		1940களில் சார்த்தரின் இருத்தலியல் கொள்கை மிகவும் பிரபலமான கோட்பாடாக 
		இருந்தது. சார்த்தர் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் சிந்தனையாளராக 
		இருந்தார். அவரது சிந்தனைகள் கேள்வி கேட்பாரற்று சுதந்திரமாக உலவின.
 
 ‘சார்த்தர் சொல்வது போல் மொழி என்பது வேறு; பிரக்ஞை என்பது வேறு அல்ல. நமது 
		மொழியே பிரக்ஞையால் கட்டமைக்கப்பட்டதுதான்’ என்று பின் நவீனத்துவ வாதிகள் 
		சொன்ன போது சார்த்தரின் இருத்தலியம் ஆட்டம் கண்டது.
 
 ழாக் தெரிதா, மிஷல் ஃபூக்கோ, ரொலாண் பார்த போன்ற பின் நவீன வாதிகள் 
		சார்த்தரின் கோட்பாடுகளை ரத்து செய்த போது அதிர்ந்தது சார்த்தர் மட்டுமல்ல; 
		மொத்த உலகமும்தான்.
 
 (தொடரும்)
 |  |