|
இந்தக் கட்டுரையை எழுதும் பொழுது இந்திய ஆய்வியல் துறை விவகாரம்
தொடர்பான எந்த வித முழுமுற்றான தீர்வுகளும் எடுக்கப்படவில்லை. சமூகத்தில்
பல்வேறு
பதவிகளிலும் பொறுப்புகளிலும் இருக்கின்ற தரப்பினர் தம்
எதிர்ப்புக்குரலைத் தொடர்ந்தார் போல் பதிவு செய்த படி உள்ளனர். விரைவில் இந்திய
ஆய்வியல் துறை பெயர் மாற்றம் குறித்து உறுதியான தகவல் தெரிந்துவிடும் என்று
அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறியுள்ளார்.
ம.இ.காவின் தேர்தல் காலக்கட்டமானதால் ஆரம்பத்தில் இந்த விவகாரம் குறித்து
கொஞ்சம் அக்கறை காட்டிய டத்தோ சிரி சாமிவேலு இப்போது அவர்தம் சகாக்களுடன்
தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ளார். சமூகத்தை எந்த வகையிலும் ஒன்று
படுத்த முடியாத அவர்களின் கட்சி சார்ந்த அரசியல் பார்வை ஓர் ஆபாச நாடகமாய்
நாடெங்கிலும் அரங்கேறி வருகின்றன. போதாக் குறைக்குச் சாமிவேலு வழக்கம் போல
தனக்கென ஓர் அணியைப் பிரித்து, வேட்பாளர்களின் பிளவில் ஒரு சிறுபான்மை
சமூகத்தை மேலும் சிறுமைப் படுத்தியுள்ளார். அக்கறையுள்ள குடிமக்கள்
குழுவைச்சேர்ந்த கா.ஆறுமுகம், வழக்கறிஞர் பசுபதி போன்ற அரசாங்கச் சார்பற்ற
இயக்கத்தினரும் இந்திய ஆய்வியல் துறைக்கு ஓர் இந்தியர்தான் தலைவராக வர
வேண்டும் எனப் போராடி வருகின்றனர்.
இப்பிரச்சனைக் குறித்து சாதகமாகவோ பாதகமாகவோ எந்த ஒரு முழுமுற்றான முடிவும்
எடுக்கப்படாத நிலையில், இந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்று பதவி வகிக்கும்
சில பழையப் பட்டதாரிகளைத்தவிர அண்மையக் காலங்களில் இதே தமிழ்த் துறையில்
பயின்று, பட்டம்பெற்று, இப்போது தமிழ் ஆசிரியராகவோ முதுகலை மாணவர்களாகவோ,
விரிவுரைஞர்களாகவோ, மொழிப்பெயர்ப்பாளர்களாகவோ இருக்கும் தமிழ்த்துறை
மாணவர்களின் குரலை இந்த எதிர்ப்பு அலையில் தேடும்போது ஏமாற்றமே
மிஞ்சுகிறது. இவர்கள் எங்கே இருக்கிறார்கள்? இவர்களுக்கும் இந்தச்
சமூகத்துக்கும் என்ன உறவு என்ற அடிப்படை கேள்வியிலிருந்தே இந்தக்கட்டுரை
விரிகிறது.
000
சிங்கப்பூரில்
செயல்பட்ட ஏழாம் கிங் எட்வர்டு (King Edward VII-1905) மருத்துவக்
கல்லூரியும் ராவில்ஸ் கல்லூரியும் (Raffles College-1929) இணைத்து,
அக்டோபர் மாதம் 8ஆம் நாள் 1949ஆம் ஆண்டில் சிங்கையில் உருவாக்கப்பட்டது
மலாயாப் பல்கலைக்கழகம். அதில், தமிழ்த்துறையை ஏற்படுத்துவதற்கு அன்றைய
மலாயா, சிங்கைத் தமிழர்கள் எழுச்சியுடன் போராடினர். இந்தப் போராட்டத்தை
அமரர் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் ‘தமிழ் முரசு நாளேடு’ முன்னெடுத்து
நடத்தியது. அதற்காக அன்றையத் தமிழர்கள்
பெரும் அளவில் ஆதரவையும் நிதியையும் திரட்டிக் கொடுத்தனர். இதன் விளைவாக,
1956ஆம் ஆண்டில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் துறை
நிறுவப்பட்டதும் பின்னர், 1959இல் மலாயாப் பல்கலைக்கழகம் கோலாலம்பூருக்கு
இடம் மாறி வந்ததும் இந்திய ஆய்வியல் துறையின் மிகச்சுருக்கமான வரலாறு.
தொடக்கத்தில், தமிழ்த் துறை நிறுவப்பட்டபோது அதற்கு ஆலோசனைகள் வழங்க,
இந்தியாவிலிருந்து நீலகண்ட சாஸ்திரியார் வந்ததும் தமிழுக்காக
உருவாக்கப்பட்ட துறையில் பயிற்றுமொழியாக ‘சமஸ்கிருதத்தை’ வைக்க வேண்டும் என
அவர் பரிந்துரை செய்ததும் இந்தப் பரிந்துரைக்கு பெரும்பான்மைத்
தமிழர்களிடமிருந்து மாபெரும் எதிர்ப்பு அலை கிளம்பியதும், இந்திய ஆய்வியல்
துறை எதிர்கொண்ட மற்றுமொரு போராட்ட வரலாறு .
காராக் அகில மலாயாத் தமிழர் சங்கம் முதலிய தமிழ் அமைப்புகள் கல்வி
அமைச்சுக்கு நேரடியாகச் சென்று கோரிக்கை மனுவை அளித்து, தமிழ் மக்களின்
ஒன்றுபட்ட எழுச்சியின் வாயிலாக அரசாங்கத்தால் தமிழ் மொழி
ஏற்றுக்கொள்ளப்பட்டதும்; பயிற்றுமொழியாகத் ‘தமிழ்’ அரியணையில்
அமர்த்தப்பட்டதும் இந்திய ஆய்வியல் துறை கடந்து வந்த பாதையில் முக்கியமான
தருணங்கள்.
இன்றும் மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ் நூலகத்திற்கு 'வல்லினம்' இதழை
வழங்கச்செல்லும் போதெல்லாம் தமிழுக்காக உருவாக்கப்பட்ட துறையில் தமிழ்
நூலகம் அமைப்பதற்கு இன்னொரு எழுச்சி இயக்கம் முன்னெடுக்கப்பட்டதும், அமரர்
கோ.சா ‘தமிழ் எங்கள் உயிர்’ எனும் முழக்கத்தோடு நிதி திரட்டும் இயக்கத்தைத்
தொடங்கி, திரட்டப்பட்ட பெரும் நிதியைக் கொண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில்
தமிழ் நூலகத்தை வெற்றியோடு உருவாக்கியதும் சில அதிர்வலைகளை ஏற்படுத்தும்.
இத்தனைப் போராட்டத்திற்குப் பிறகு தமிழ்த்துறையில் படிப்பதற்கு மாணவர்களைச்
சேர்க்கும் பணியும் நடந்தது. அன்று நாடுதழுவிய நிலையில் நடைபெற்ற தமிழர்
திருநாள் விழாக்களில் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்த்துறையில்
மாணவர்கள் குறையும் போதெல்லாம் தமிழர் சார்ந்த இயக்கங்களின் அன்றையத்
தலைவர்கள் ‘பல்கலைக்கழத்தில் தமிழை ஒரு பாடமாகப் படிக்க வேண்டும்’ என்று
ஊர்கள்தோறும், தோட்டங்கள் தோறும் இளைஞர்களுக்கு ஊக்கமூட்டி
உற்சாகப்படுத்தினர்.
அன்று தொடங்கி இன்று வரையில் மலாயாப் பல்கலைகழகத்தில் ஆயிரக்கணக்கில்
மாணவர்கள் சேர்ந்து தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் பயின்று பட்டதாரிகளாக
உருவாகி இருப்பது, இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டங்கள் வரையில் தமிழிலேயே
படிப்பதற்கான சூழல் மலாயாப் பல்கலைக்கழகத்தில் இன்று உருவாகி உள்ளதும்
அனைவரும் அறிந்த தகவல். ஆக, இந்திய ஆய்வியல் துறைக்குப் போராட்டம் என்பது
புதிதல்ல என்பது ஒரு புறம் இருக்க இப்போது எனது பழைய கேள்விக்கே வருகிறேன்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்று பதவி வகிக்கும் சில பழையப் பட்டதாரிகளைத்
தவிர அண்மையக் காலங்களில் இதே தமிழ்த் துறையில் பயின்று, பட்டம்பெற்று,
இப்போது தமிழ் ஆசிரியராகவோ முதுகலை மாணவர்களாகவோ, விரிவுரைஞர்களாகவோ,
மொழிப் பெயர்ப்பாளர்களாகவோ இருக்கும் தமிழ்த்துறை மாணவர்களின் குரலை இந்த
எதிர்ப்பு அலையில் தேடும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. இவர்கள் எங்கே
இருக்கிறார்கள்?
000
இந்தக்கேள்விக்குப் பதில் கூற வேண்டியது இந்திய ஆய்வியல் துறையில் உள்ள
கல்விமான்கள்தான்.
மலாயாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கவுத் ஜாஸ்மன்
தெளிவாகச் சொல்கிறார்:'கல்வித்துறை சார்ந்த எழுவரை மட்டுமே கொண்ட ஒரு சிறிய
துறை இந்திய ஆய்வியல் துறை. பேராசிரியர் முகமது ரெடுவான் அரிஃபை இடைக்காலத்
தலைவராக அனுப்பினோம். என்ன பயங்கரம் அங்கு! ஒவ்வொருவரும் மற்றவருக்கு
எதிராக உள்ளனர். அங்கு இரு அணிகள் உள்ளன. ஓர் அணிக்குப் பேராசிரியர்
ஒருவரும் மற்றோர் அணிக்குப் பதவிக்காலம் முடிவடைந்த துறைத்தலைவரும் தலைமை
தாங்குகின்றனர். கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தப் பிரச்சினைகள் நிலவி வருகின்றன;
அவற்றைச் சரிசெய்ய இயலவில்லை. நாங்கள் சலிப்பு அடைந்துவிட்டோம்; அப்படியே
விட்டுவிட்டோம்.'
ஆரோக்கியமற்ற ஒரு கல்விச்சூழலில் உருவாகும் மாணவர்களுக்கு ஏற்படும்
அசௌகரியங்களும் அலட்சியப்போக்கும் மொண்ணைப்பார்வையும் சுயநலமுமே இந்திய
ஆய்வியல் துறை மாணவர்களுக்கு அதன் கல்விமான்கள் இறுதியாண்டில் அருளும்
கொடை. தங்களின் பதவி ஆசைக்கும் ஆணவத்திற்கும் தீனிப்போட இந்த இந்திய
ஆய்வியல் துறையில் உள்ள இரு கோஷ்டிகளும் செய்யும் கீழறுப்பு வேலைகள்
தமிழ்த் திரைப்பட வில்லன் நடிகர்களை நினைவுறுத்துகின்றன. இவர்களின் கோஷ்டி
சண்டையில் அவர்களிடம் இருக்கின்ற வசதிகளில் குறைந்த பட்சத்தைக்கூட
இந்தச்சமூகத்திற்குத் தர தயாராக இல்லை.
தமிழை மையமாக வைத்துச் செயல்படுகிற ஒரு துறையில் தமிழ்ச் சமூக, மொழி, கலை,
பொருளாதாரம் தொடர்பாக நாம் நகர்த்திச் செல்ல வேண்டிய தூரங்கள் இன்னமும்
அதிகம் இருக்க, வெறும் பதவிக்காகவும் தன்னலப்போக்குக்காகவும் கூட்டணி
சேர்ப்பதற்காகவும் தத்தம் நேரத்தையும் சக்தியையும் விரயப்படுத்தும் ஒரு
கல்விமான்கள் கூட்டத்தை மாணவர்கள் பொருட்படுத்தாதது ஆச்சரியம்
அளிக்கவில்லை. சராசரி மாணவ எண்ணங்களில் எதிர்ப்புணர்வு,
நன்றியுணர்ச்சியிலிருந்தே தொடங்குகிறது. சமூகம், மொழி, இனம் போன்ற
உணர்வுகளை எந்த வகையிலும் அவர்களிடம் விதைக்க வலுவற்ற ஆளுமைகள் முக்கியப்
பீடங்களில் வீற்றிருக்கும் போது, இளம் தலைமுறையின் குறைந்த பட்ச
எதிர்ப்புணர்வு நன்றியுணர்ச்சியில் விரிவதாகவே இருக்க வேண்டும். இந்த இறுதி
நம்பிக்கையும் அறுந்து போகும் படி அண்மையில் நிலவிய மாணவர்களின் 'மௌனம்'
பல்கலைக்கழகங்கள் உற்பத்தி செய்வது உயர்த்தட்டு கூலிகளைத்தான் என மீண்டும்
நிரூபணமாகிறது.
000
இதில் மாணவர்கள் மனநிலையையும் ஆராய வேண்டியுள்ளது. இதற்கு பொறுப்பானவர்கள்
யார்? என்ற கேள்விக்கு 'இவர்தான்' என கை காட்ட முடியாதபடிக்குப் பின்னிப்
பின்னி விரியும் சூட்சுமமான வலைகள் பலரின் முகங்களையும் உள்ளடக்கியுள்ளது.
இதில் ஏதோ ஒரு மூலையில், வாழ்வையும் உடன் சேர்த்து போதிக்காதத் தமிழ்
ஆசிரியர்களின் முகங்களும், தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பாத சராசரி பெற்றோர்களின்
முகங்களும், தமிழில் எழுதி எழுத்தாளன் என பீற்றிக்கொண்டு தன் பிள்ளையைத்
தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பாத தமிழ் எழுத்தாளர்களின் முகங்களும், தமிழ்
சார்ந்த இயக்கங்களில் இருந்துகொண்டு சுயநலத்துக்காகச் சுரண்டும்
முகங்களும், அதிகாரத்தின் கால்கள் நக்கும் முகங்களும், தேங்கி சாக்கடையான
அறிவோடு மாணவர்கள் முன் நிற்கும் முகங்களும், சமூகப் பொறுப்புணர்வு அற்ற
ஊடகங்களின் முகங்களும், பொய் முகங்களும், முகமில்லா முகங்களும் ஒரே
தோரணையில் சிரிக்கின்றன. பின் வெட்கம் இல்லாமல் ஒரே கோஷத்தில்
சொல்கின்றன...
'தமிழ் எங்கள் ...யிர்'
நன்றி : திருத்தமிழ் / மலேசியா கினி
|
|