|
கலை, இலக்கிய
விழா காணொளி. இங்கே சொடுக்கவும்.
அண்மையில் (29.08.09) வல்லினம் இதழ் ஏற்பாட்டில் 'கலை இலக்கிய விழா'
சிறப்பாக நடைப்பெற்றது. டான் சிரி சோமா அரங்கிலும் மண்டபத்திலும் பல்வேறு
நிகழ்வுகளை உள்ளடக்கியிருந்தது இந்நிகழ்வு.
ஓவியம் மற்றும் நிழல்பட கண்காட்சி
இந்த விழாவின் முதல் அங்கமாக ஓவியர் சந்துருவின் ஓவியக் கண்காட்சியும்
'ஸ்டார்' கணேசனின் நிழல்பட கண்காட்சியும் பார்வை யாளர்களைக் கவர்ந்தது.
நிகழ்வின் அறிவிப்பாளராக இருந்த கவிஞர் தோழி ஓவியர் சந்துருவின்
ஆளுமையையும் 'ஸ்டார்' கணேசனின் ஆளுமையையும் தனது அறிவிப்பில் தெளிவாக
விளக்கினார்.
ஓவியர் சந்துரு, கருப்பு வெள்ளை கோடுகளில் உருவாக்கும் காட்சிகளும்
அதன் அழகியலும் தோழியின் அறிவிப்பில் விளக்கப்பட்டது. ஓவியர்
சந்துரு இந்நிகழ்வுக்கென பிரத்தியேகமாய் வரைந்த தோட்டப்புற வாழ்வு சார்ந்த
காட்சிகள் பலரையும் நமது சுவடுகளை மீட்டுணர உதவியது எனலாம். மலேசியாவில்
பல இந்திய ஓவியர்கள் ஓவிய கண்காட்சி நடத்தியிருந்தாலும்,
மலேசியத் தமிழர்களின் வாழ்வைப் பிரதிபலிக்கும்படியாக
தனித்துவத்தோடு அமைந்தவை சந்துருவின் ஓவியங்கள்.
'ஸ்டார்' கணேசனின் அற்புதமான புகைப்படங்கள் அவரின் பத்திரிகைத் துறையைத்
தவிர்த்து அவர் கொண்டிருக்கும் ஆத்மார்த்தமான கலையுணர்வை வெளிபடுத்தியது.
உலகம் முழுதும் நடைப்பெறும் பல நிழல்பட போட்டிகளில் இவரது
நிழல்படங்கள் பரிசுகளை வென்று குவித்திருப்பது தோழியின் அறிவிப்பில்
பலர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
நிகழ்விற்குத் தலைமையேற்ற தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத் தலைவர் டத்தோ
சகாதேவன் மற்றும் சிறப்பு வருகை புரிந்த கொடை நெஞ்சர் ரத்னவள்ளி அம்மையார்
முறையே ஓவியர் சந்துருவின் ஓவியம் மற்றும் 'ஸ்டார்' கணேசனின் நிழல்பட
கண்காட்சியைத் திறந்து வைத்தனர். கலைஞர்களை வெகுவாகப் பாராட்டிய
டத்தோ சகாதேவன் அவர்களுக்கும் திருமதி ரத்னவள்ளி அம்மையார்
அவர்களுக்கும் இவ்விரு கலைஞர்களால் தங்கள் படைப்பின் மூலமாகவே
சிறப்பு செய்யப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில்
இவ்விரு கலைஞர்களும் தங்கள் கலைப்பயணத்தைப் பார்வையாளர்களிடம் பகிர்ந்து
கொண்டனர். இது போன்ற கண்காட்சி தங்களின் கலைப்பயணத்தில் புதிய
அனுபவம் என்று கூறி இதை ஏற்பாடு செய்த வல்லினதிற்குத் தங்கள்
நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
உரைகள்
இரண்டாவது அங்கம் டான் சிரி சோமா அரங்கில் நடைப்பெற்றது. நிகழ்வின்
ஏற்பாட்டாளரான வல்லினம் இதழ் ஆசிரியர் ம.நவீன் தமது வரவேற்புரையில்
சமரசங்கள் இன்றி வல்லினம் தனது பாதையில் செல்வதையும் அதன் பயணம் வேறொரு
பரிணாமத்தை அடைந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். காலாண்டிதழாக இதழ்
வடிவில் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்த வல்லினம், எந்த
அரசியல்வாதிகளிடமும் கையேந்தாததால் அதன் இணையப் பரிணாமம் பொது
புத்தியில் 'தோல்வியாக' வகைப்படுத்தப்படுவதைப் பூடகமாகச்
சுட்டிக்காட்டினார். சுமார் இருபத்து ஐந்து பேரிடம் பணம் பெற்று
நடத்தப்பட்ட இவ்விதழ் ஒரு சிலரால் 'பிச்சை வாங்கி நடத்தப்படும்
இதழ்' என விமர்சிக்கப்பட்டதையும் சாடுவதாக அமைந்தது அவர் உரை.
இந்நிகழ்வின் முக்கியப்புரவலரான திரு.ராமகிருஷ்ணன் வல்லினம் தொடர்ந்து
சிறப்பாக பயணிக்க வேண்டும் என வாழ்த்தினார். தமது ஆதரவு
வல்லினத்திற்குத் தொடர்ந்து இருக்கும் எனக் கூறி அமர்ந்தார். வல்லினம்
வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய டாக்டர்.சண்முகசிவா சிற்றிதழ்களின்
தோல்விதான் அதன் வெற்றி என்றார். ஒரு சிற்றிதழ் உருவாகும்போதே அது தன்
மரணத்தைத் தீர்மானித்தப் படிதான் உருவாகிறது என்றார். வல்லினத்தின் இணைய
பரிணாமம் தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.
கவிதை மற்றும் சிறுகதை திறனாய்வு
'கவிதைத் திறனாய்வு' கட்டுரையை வாசிக்க வேண்டியிருந்த ஜாசின் ஏ.தேவராஜன்
தவிர்க்க முடியாத காரணங்களால் வர முடியாமல் போகவே அவரது கட்டுரை மட்டும்
கவிஞர் பச்சைபாலனால் வாசிக்கப்பட்டது. எழுதியவர் இல்லாததால் விவாதங்களும்
நடைப்பெறவில்லை. தனக்குக் கொடுக்கப்பட்டிருந்தப் பணியை
மிகச்செவ்வனே செய்திருந்தார் தேவராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வல்லினத்தில் இடம்பெற்ற சிறுகதைகளை ஒட்டி சு.யுவராஜன் விமர்சனம்
செய்தார். எழுத்தாளர் சீ.முத்துசாமியின் தலைமையில் இவ்வங்கம்
நடைபெற்றது. யுவராஜனின் சுருக்கமான அதே சமயத்தில் தீவிரமான விமர்சனம்
பலரிடமிருந்து அதிருப்தி அலையை ஏற்படுத்தியது. அவரின் விமர்சன பாங்கு
பலருக்கு புரியவில்லை என்பதும் உண்மை. மரபான விமர்சனத்தில் இருந்து விலகி
யுவராஜன் தன்னைக் கவர்ந்த கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து அதின் மையத்தை
உருவிப் பேசியது மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலுக்குப் புதுமை. கதைகள்
மற்றும் விமர்சனத்தை ஒட்டிய விவாதங்களுக்கு அதிக முக்கியத்துவம்
அளித்த இவ்வங்கம் வருகையாளர்களின் குற்றச்சாட்டுகளோடு மட்டுமே
நின்றது. டாக்டர் சண்முகசிவாவின் விமர்சனத்தை ஒட்டிய தனது
பகிர்வோடு இவ்வங்கம் நிறைவு கண்டது.
புத்தக வெளியீடும் திறனாய்வும்
ஒரு மணிநேர உணவு இடைவேளைக்குப்பிறகு மூன்றாவது அங்கம்
தொடங்கியது.எழுத்தாளர் கோ.முனியாண்டி அவர்களால்
அமரர்.எம்.ஏ.இளஞ்செல்வனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.29.09.09
எம்.ஏ.இளஞ்செல்வனின் நினைவுநாள் என்பது அப்போதுதான் பலருக்கும் தெரிந்தது.
மலேசியாவில் புத்திலக்கியம் வளர வேண்டும் என ஆவல் கொண்டு செயல்பட்ட அவரின்
நினைவு நாளில் 'கலை இலக்கிய விழா' நடைப்பெற்றது தற்செயலானது.
ம.நவீனின் கவிதை தொகுதியான 'சர்வம் ப்ரம்மாஸ்மி' புத்தகத்தை
ஆதி.இராஜகுமாரன் அவர்கள் வெளியிட ம.நவீன் பெற்றோர்கள் பெற்றுக்கொண்டனர்.
பா.அ.சிவத்தின் மொழிப்பெயர்ப்புக் கவிதையான 'பின்னர் அப்பறவை மீண்டும்
திரும்பியது' நூலை எழுத்தாளர் கோ.முனியாண்டி வெளியிட வழக்கறிஞர் மதியழகன்
பெற்றுக்கொண்டார். இதேபோல மஹாத்மனின் சிறுகதையான 'மஹாத்மன் சிறுகதைகள்'
நூலினை எழுத்தாளர் சீ.முத்துசாமி வெளியிட மஹாத்மனின் தாயார்
பெற்றுக்கொண்டார்.
மூன்று நூலாசிரியர்கள் சார்பாக எழுத்தாளர் மஹாத்மன் பேசினார்.
வல்லினம் போன்ற ஒரு சிறு பத்திரிகை செய்யும் இலக்கியப் பணிகளை
எழுத்தாளர் சங்கத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் செய்தால் மலேசிய
இலக்கியமும் இலக்கியவாதிகளும் பயனடைவர் என்றார்.
தொடர்ந்து நூல் திறனாய்வு நடைப்பெற்றது. ம.நவீனின் நூலை பா.அ.சிவமும்
மாஹாத்மனின் நூலை சிவா பெரியண்ணனும் சிவத்தின் நூலை சீ.அருணும் முறையே
ஆய்வு செய்தனர். ஒவ்வொருவரும் தத்தம் பார்வையில் புத்தகங்களை
விமர்சித்தனர். அவ்வமர்வில் சிங்கை இளங்கோவனின் உரையும் இடம்பெற்றது
குறிப்பிடத்தக்கது. அதிகாரத்துக்கு முன் இலக்கியவாதி அடிமையாகக் கூடாது
என்பதிலிருந்து அவருக்கே உரிய தீவிரத்துடன் உரையை கூர்மைப்படுத்தினார்.
நிகழ்வின் இடைவெளியாக மீண்டும் அரை மணிநேரம் தேநீருக்காக ஒதுக்கப்பட்டு
நான்காம் அங்கம் தயாரானது.
வல்லினம் இணைய இதழ் அறிமுகம்
அடுத்த அமர்வில் 'வல்லினம்' காலாண்டிதழ் மாத இதழின் தோரணையில் அகப்பக்கமாக
வெளியீடு கண்டது. வழக்கறிஞரும் சமூக அக்கறை மிகுந்தவருமான பசுபதி அவர்கள்
சமூக விழிப்புணர்வு மிக்கத் தமது உரைக்குப்பின் அகப்பக்கத்தை
அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தார். திரு.பசுபதி அவர்கள்
எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய சமூக அக்கறை குறித்தும் இளைஞர்கள்
செல்ல வேண்டிய இலக்குக் குறித்தும் தமதுரையில் குறிப்பிட்டார்.
www.vallinam.com.my எனும் முகவரியில் இயங்கும் வல்லினம் இணைய இதழ் இனி
மாதம் தோறும் புதுப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
சிங்கை இளங்கோவனின் 'மிருகம்' நாடகம்
இறுதி அங்கமாக சிங்கை இளங்கோவனின் 'மிருகம்' நாடகம் ஒளித்திரை வழியாக
அரங்கேற்றம் கண்டது. சிங்கப்பூருக்கு வந்து சேரும் தமிழகத்தொழில் நுட்ப
ஊழியர்களால் சிங்கைவாசிகள் குறிப்பாகத் தமிழர்கள் அடையும் பாதிப்புகளை
அது எடுத்து இயம்பியது. காத்திரமான அந்நாடகத்தால் பலர்
அதிர்ச்சிக்குள்ளானார்கள். சிலர் நாடகத்தை நிறுத்தும்படி 'ஸ்டாப்...ஸ்டாப்'
என ஆங்கிலத்தில் கத்தியது வேடிக்கையாக இருந்தது. ஒன்றரை மணி நேர
நாடகமான 'மிருகம்' நிறைவு கண்டதோடு நிகழ்வும் முடிவுற்றது, சில
பதற்றங்களோடும்... சில அதிர்ச்சிகளோடும்... புத்துணர்வோடும்.
|
|